ஐபிஎல் 2023 - பயிற்சியை தொடங்கிய சிஎஸ்கே.. முதல் ஆளாக பங்கேற்றது யார் தெரியுமா? தோனி கிடையாது
சென்னை: ஐபிஎல் தொடர் இன்னும் சில வாரங்களில் தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாமில் அனுபவ வீரர் ரஹானே கலந்துகொண்டுள்ளார்.
30 வயதுக்கு மேல் எந்த வீரராக இருந்தாலும் எங்கள் அணிக்கே என்று சிஎஸ்கே அணியில் சொல்லப்படாத உறுதி மொழி ஒன்று பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் டிசம்பர் மாதம் நடைபெற்று முடிந்த ஐபிஎல் ஏலத்தில், அனுபவ வீரர் ரஹானேவை சென்னை அணி ஏலத்தில் வாங்கியது.
அதேபோல் ஃபார்மின்றி தவித்து வரும் ரஹானேவை யாரும் வாங்க முன் வராததால் ரூ.50 லட்சத்தில் அடிப்படை தொகைக்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்தது. இதன் மூலம் டாடிஸ் ஆர்மி என்ற பெயருக்கு சென்னை அணி எவ்வித களங்கமும் இல்லாமல் பார்த்துக் கொண்டது.

தோனி கடைசி சீசன்
அதுமட்டுமல்லாமல் பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட சில வீரர்களையும் சென்னை அணி அதிரடியாக வாங்கியது. வழக்கம் போல் சென்னை அணி அனைத்து துறைகளிலும் சிறந்த வீரர்களை அணியில் வைத்துள்ளது. இதனால் தோனியின் கடைசி சீசனில் கோப்பை நிச்சயம் என்று ரசிகர்களும் நம்பிக்கையாக இருக்கிறார்கள்.

சிஎஸ்கே பயிற்சி முகாம்
இதனிடையே கடந்த ஒரு வாரமாக சென்னை அணி ஐபிஎல் தொடருக்கான பயிற்சி முகாமை தொடங்கியுள்ளது. ஏற்கனவே சென்னை அணியின் இளம் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில், இளம் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹார் பயிற்சியை தொடங்கினார். அவருடன் இன்னும் சில வீரர்களும் பயிற்சியை தொடங்கியுள்ளார்கள்.

ரஹானே பயிற்சி
இந்த நிலையில் சென்னை அணிக்காக புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள அஜிங்கியா ரஹானே பயிற்சியை தொடங்கியுள்ளார். சுழற்பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொள்ளும் ரஹானேவுக்கு சென்னை சேப்பாக்கம் ஆடுகளத்தில் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வாய்ப்பு வழங்கப்படும் பட்சத்தில் ரஹானே மீண்டும் தனது ஃபார்மை மீட்டெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புனே அணி
அதேபோல் ரஹானேவின் வருகையால் இளம் வீரர்களும் உற்சாகமடைந்துள்ளனர். அதற்கு, இந்திய ஆடுகளங்கள் குறித்த அவரது அனுபவமும், தோனியுடனான ரஹானேவின் நட்புமே காரணமாக உள்ளது. ஏற்கனவே ஐபிஎல் தொடரில் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் தோனி, ரஹானே மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஒன்றாக இணைந்து விளையாடியுள்ளனர். தற்போது மூவரும் மீண்டும் சென்னை அணியில் இணைந்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications