ஜெய்ப்பூர்: 2025 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தான் விளையாடிய 13 போட்டிகளில் 10 தோல்விகளை சந்தித்து இருக்கிறது. நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பத்தாவது தோல்வியை சந்தித்தது. அதுவும் வெறும் பத்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இது போல இந்த ஆண்டு பல போட்டிகளில் வெற்றிக்கு அருகே வந்து தோல்விகளைச் சந்தித்து இருக்கிறது.
இந்த நிலையில், அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இந்தத் தோல்விகளுக்குக் காரணமே பந்துவீச்சுதான் என சரமாரியாகத் தனது அணியை விமர்சனம் செய்திருக்கிறார். "பேட்ஸ்மேன்களால் இந்த நிலை ஏற்படவில்லை. பௌலர்களால்தான் இந்த நிலை ஏற்பட்டு இருக்கிறது" என அவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த ராகுல் டிராவிட் அணியின் தோல்வி குறித்து விவரித்தார். அவர் கூறியதாவது:
"வெறும் பேட்ஸ்மேன்களை மட்டும் குறை கூறுவதால் எந்த பயனும் இல்லை. பவுலர்களும்தான் அதற்கு முக்கிய காரணம். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இன்று நடந்த போட்டிக்கு 220 ரன்கள் என்பது அதிக இலக்கு. 195 அல்லது 200 ரன்கள் தான் எடுத்திருக்க முடியும்.
ஆனால், நாங்கள் 20 ரன்கள் அதிகமாக விட்டுக் கொடுத்தோம். இது மிகவும் கடினமான ஒன்று. நாங்கள் மிகவும் நெருக்கமாக வந்தோம், ஆனால் சேசிங்கை வெற்றிகரமாக முடிக்க முடியவில்லை. நாங்கள் இந்தத் தொடர் முழுவதும் 15 அல்லது 20 ரன்களை கூடுதலாக விட்டுக் கொடுத்தோம் என்று நினைக்கிறேன்.
நாங்கள் பல போட்டிகளை வெற்றிக்கு அருகில் வந்து தோற்றோம். லோயர் ஆர்டர் மற்றும் லோயர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களால் அந்த பெரிய ஷாட்களை அடிக்க முடியவில்லை. ஐந்து போட்டிகளில் மிகவும் குறைவான வித்தியாசத்தில், அதுவும் ஒன்று அல்லது இரண்டு பெரிய ஷாட்களை அடித்திருந்தால் கூட வெற்றி பெற்றிருக்க முடியும் என்ற நிலைக்குச் சென்று தோற்று இருக்கிறோம்.
நாங்கள் நிறைய விக்கெட்டுகளை இழந்தோம் என்று சொல்லிவிட முடியாது. நாங்கள் இன்றைய போட்டியில் கூட ஐந்து விக்கெட்டுகளைத்தான் இழந்திருந்தோம். ஆனாலும் அந்த ஷாட்களை எங்களால் அடிக்க முடியவில்லை" இவ்வாறு ராகுல் டிராவிட் பேசியிருக்கிறார்.