“அதுக்கு சரிபட்டு வரமாட்டார்” கே.எல்.ராகுலை ஓரம் கட்டிய டிராவிட்.. ஆஸி,டெஸ்டில் வித்தியாச முயற்சி!
நாக்பூர்: ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியாவின் முன்னாள் துணைக்கேப்டன் கே.எல்.ராகுல் வேண்டாம் என பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் முடிவெடுத்துள்ளனர்.
இரு அணிகளுக்கும் இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் இன்னும் 3 நாட்களில் தொடங்கவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் வரும் பிப்ரவரி 9ம் தேதி தொடங்குகிறது.
இதற்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆஸ்திரேலிய அணி தங்களது ப்ளேயிங் 11-ஐ கிட்டத்தட்ட தேர்வு செய்துவிட்ட சூழலில் இந்திய அணி தற்போது தான் ஆலோசனைகளையே செய்து வருகிறது.

ஆஸ்திரேலிய தொடர்
இந்திய அணியை பொறுத்தவரையில் பேட்டிங் மற்றும் பவுலிங் என தீர்வு காணக்கூடிய சில பிரச்சினைகள் தான் உள்ளன. ஆனால் பெரிய சிக்கலாக இருப்பது விக்கெட் கீப்பிங் தான். இந்திய டெஸ்ட் அணிக்கு தவிர்க்கவே முடியாத கீப்பராக ரிஷப் பண்ட் மட்டுமே இருந்தார். ஏனென்றால் அவர் எந்த களம், எந்த சூழல் என்றும் யோசிக்காமல் அதிரடியாக ரன்ரேட்டை உயர்த்தி வெற்றி பெற்று தருவார். ஆனால் இந்த முறை அவரால் விளையாட முடியாமல் போயுள்ளது.

கே.எல்.ராகுல் புறக்கணிப்பு
இதனையடுத்து ரிஷப் பண்ட்-ன் மிடில் ஆர்டர் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் செய்வதற்கு அனுபவம் வாய்ந்த வீரராக கே.எல்.ராகுல் தான் இருக்கிறார். தொடக்கத்தில் இருந்தே விக்கெட் கீப்பராக செயல்பட்டு வரும் ராகுல், இந்திய அணியில் மட்டும் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார். அவர் மிடில் ஆர்டரிலும் நன்றாக ஆடுவதால் கீப்பிங் பொறுப்பையும் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

என்ன காரணம்
இந்நிலையில் கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பர் இல்லை என உறுதிபடுத்தியுள்ளனர். கே.எல்.ராகுலுக்கு கடந்த ஒரு வருடத்தில் அளவிற்கு அதிகமான பல்வேறு காயங்கள் ஏற்பட்டுள்ளன. அதில் இருந்து குணமடைந்து தற்போது தான் விளையாடி வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட் போன்ற நீண்ட போட்டிகளில் அவரை கீப்பிங் செய்யவிட்டால் மீண்டும் காயத்திற்கு தான் அது வழிவகுக்கும் என இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை ப்ளான்
50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தாண்டு இறுதியில் வரவுள்ளது. இதற்காக சீனியர் வீரர்களை முடிந்த அளவிற்கு கவனித்துக்கொள்கிறார்கள். எனவே ராகுலை டெஸ்ட் தொடரில் ரிஸ்க் எடுக்க வைத்தால், அது உலகக்கோப்பையில் தாக்கத்தை ஏற்படுத்திவிடும். எனவே அவரை முழு நேர பேட்ஸ்மேனாக மட்டும் வைத்துவிட்டு ஸ்பெஷலிஸ்ட் கீப்பரை கொண்டு வரவுள்ளனர்.

மாற்று வீரர்கள் யார்?
கே.எல்.ராகுலை விட்டால் இந்திய அணியில் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் கீப்பிங் செய்ய இஷான் கிஷான் மற்றும் கே.எஸ்.பரத் ஆகிய 2 வீரர்கள் உள்ளனர். இதில் இஷான் கிஷான், ரிஷப் பண்ட்-ஐ போலவே அதிரடி ஆட்டத்தை கொண்டவர். மற்றொருபுறம் கே.எஸ்.பரத் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டுள்ளார் என்பதால் முடிவெடுக்க தாமதமாகி வருகிறது.


Click it and Unblock the Notifications