8 மாதங்கள் தடைக்காலம்
ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய இந்தியாவின் துவக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா, கடந்த ஜூலை மாதத்தில் இருந்து கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து தடை விதிக்கப்பட்டார். அவர் பயன்படுத்திய இருமல் மருந்தில் தடை செய்யப்பட்ட மருந்து இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
அதிரடி ஆட்டத்தை துவக்கிய பிரித்வி
இந்நிலையில் கடந்த 15ம் தேதியுடன் அவரது தடைக்காலம் நிறைவுற்ற நிலையில், தேசிய அளவில் நடைபெறும் சையத் முஸ்தக் அலி கோப்பை தொடரில் மும்பை அணி சார்பில் அசாம் அணியை எதிர்த்து களமிறங்கிய அவர் 39 பந்துகளில் 63 ரன்களை குவித்து தன்னுடைய அணியின் வெற்றிக்கு காரணமானார்.
நாட்களை கடப்பது கடினமாக இருந்தது
இந்த வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரித்வி ஷா, இதுபோன்ற தடை தனக்கு விதிக்கப்படும் என்று தான் கனவிலும் நினைக்கவில்லை என்று கூறினார். ஒவ்வொரு நாட்களையும் கடத்துவது மிகவும் கடினமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
லண்டனுக்கு சென்ற பிரித்வி ஷா
செப்டம்பர் 15 வரை பயிற்சியிலும் ஈடுபட தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், லண்டனுக்கு சென்ற பிரித்வி ஷா, இதுவும் கடந்து போகும் என்ற எண்ணத்தை மட்டும் விடாமல் பிடித்துக் கொண்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
பிட்னெசில் அதிக அக்கறை
லண்டனில் இருந்து தான் திரும்பிய நிலையில் தன்னை தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொள்ள ராகுல் டிராவிட் அழைத்ததாகவும், அவரின் ஆலோசனையின் கீழ் தான், தன்னுடைய பிட்னெசில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டதாகவும் பிரித்வி ஷா தெரிவித்துள்ளார்.
வழிகாட்டிய ராகுல் டிராவிட்
அந்த நேரத்தில் தான் தீவிரமாக வலைப்பயிற்சி மேற்கொண்ட நிலையில், அங்கு குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், வருண் ஆரோன் போன்ற பௌலர்களின் நட்பு கிடைத்ததாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும் ராகுலின் வழிகாட்டுதல் மற்றும் மனத்தை மேம்படுத்த அவர் அளித்த ஆலோசனைகளும் இந்த தடைக்காலத்தில் தனக்கு உறுதுணையாக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்ல அனுபவம் கிடைத்தது
தான் எதை எப்படி சாப்பிட வேண்டும் என்ற புரிதல் இல்லாமல் செய்த செயலால் இந்த தடை தனக்கு விதிக்கப்பட்டதாக தெரிவித்த பிரித்வி ஷா, இந்த தடை காலத்தில் இதுகுறித்து சரியான புரிதல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதேபோல தன்னுடைய நெருக்கடி நிலைகளில் தன்னுடன் கூட இருக்கும் தன்னுடைய தந்தைக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.