மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பல வெற்றிகளை பெற்றுத் தருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை என முக்கிய தொடர்களில் இந்திய அணி தோல்வியைத் தழுவி இருக்கிறது.
இந்த நிலையில் தற்போது 50 ஓவர் உலகக்கோப்பை வரும் அக்டோபர் மாதம் நடைபெறுகிறது. இதற்காக இந்திய அணியை தயார் செய்கிறேன் என்று பெயரில் நன்றாக இருக்கும் பேட்டிங் வரிசையை பயிற்சியாளர் டிராவிட் மாற்றப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

90ஸ் கிட்ஸ்க்கு 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பை எந்த அளவுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது என்று நன்றாக தெரியும். தொடக்க வீரராக களம் இறங்கி பட்டையை கிளப்பிக் கொண்டிருந்த சச்சின் டெண்டுல்கரை உலகக் கோப்பை தொடருக்கு முன் நான்காவது இடத்தில் பேட்டிங் வரிசையில் கேப்டன் டிராவிட் களம் இறக்கினார். இதன் மூலம் வங்கதேசம், இலங்கை ஆகிய அணிக்கு எதிராக இந்திய அணி தோல்வியை தழுவி முதல் சுற்றிலேயே வெளியேறியது.

இது பெரும் விமர்சனத்தை உண்டாக்கியது. அடுத்து டிராவிட் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் அதே போன்று ஒரு குழப்பத்தை ராகுல் டிராவிட் செய்ய இருக்கிறார். தற்போது இந்திய அணியில் ரிஷப் பண்ட் இல்லாத நிலையில் மாற்று விக்கெட் கீப்பராக களம் இறக்கப்பட்ட கேஎல் ராகுல் காயம் காரணமாக விளையாடவில்லை.

இதனால் இசான் கிஷனுக்கு வாய்ப்பு வழங்க டிராவிட் முடிவெடுத்து இருக்கிறார். இதனால் தான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இஷான் கிஷன் தொடக்க வீரராக களம் இறங்கி இருக்கிறார். இதன் மூலம் இந்திய அணியில் தற்போது இஷான் கிஷனை தொடக்க வீரராக களம் இறக்க டிராவிட் முடிவு செய்து இருக்கிறாராம்.
இதற்கு காரணம் வலது கை, இடது கை பேட்ஸ்மேன்கள் தொடக்கத்தில் தேவை என்பதால் இந்த மாற்றம் செய்யப்பட இருக்கிறது. இதனால் கில் மூன்றாவது இடத்திலும் விராட் கோலி நான்காவது இடத்திலும் களமிறங்க உள்ளார். இந்திய அணியில் தற்போது முதல் மூன்று இடங்கள்தான் செட் ஆகியிருக்கிறது. அதிலும் டிராவிட் குழப்பத்தை ஏற்படுத்த போகிறார். இதனால் இந்திய அணி உலக கோப்பையில் நிச்சயம் அடி வாங்க போகிறது.