மும்பை : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது ரசிகர்களை ஆத்திரமடைய செய்திருக்கிறது. இதன் காரணமாக ரசிகர்களை சமாதானப்படுத்தும் முடிவில் பிசிசிஐ இறங்க உள்ளது.
இந்த தோல்விக்கான காரணம் என்ன? டெஸ்ட் கிரிக்கெட்டில் என்ன மாற்றங்களை இந்திய அணி செய்ய வேண்டும் என்பது குறித்து பிசிசிஐ ஆலோசனை நடத்துகிறது.
இதில் இந்திய டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராகுல் டிராவிட்டை நீக்கிவிட்டு டெஸ்ட்டுக்கு என்று தனிப் பயிற்சியாளரை நியமிக்க முடிவெடுக்கப்படலாம் என தெரிகிறது.டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 என மூன்று பிரிவுக்குமே ராகுல் டிராவிட் தான் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கிறார்.

மேலும் இந்திய அணி தற்போது அதிக போட்டிகளில் விளையாடுவதால் அது டிராவிட்டுக்கு கூடுதல் பணி சுமையை கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும் டிராவிட் தலைமையில் இந்திய அணி ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என மூன்று முக்கிய தொடரிலும் தோல்வியை தழுவி இருக்கிறது.
இது அனைத்தும் டிராவிட்டுக்கு எதிராக திரும்பி உள்ளது. ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் வரும் உலகக்கோப்பை தொடருடன் முடிவடைகிறது. இதனால் ராகுல் டிராவிட் பதவி காலத்தை நீட்டிக்க வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது. இதனால் பிசிசிஐ தற்போது டிராவிட்டை நீக்கும் விதமாக டெஸ்ட்க்கு தனிப் பயிற்சியாளர் மற்றும் ஒரு நாள் போட்டிக்கு தனிப் பயிற்சியாளர் என இரண்டாகப் பிரிக்க வாய்ப்பு உள்ளது.
இதனால் வரும் ஆசிய கோப்பை மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் என இரண்டிலும் ராகுல் டிராவிட் எவ்வாறு பயிற்சியாளராக செயல்படுகிறார் என்பதைப் பொறுத்தே அவருடைய பதவிக்காலம் நீட்டிக்கப்படும். இதனால் தற்போது டிராவிட்டின் பயிற்சியாளர் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனை டிராவிட் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.