பெங்களூர்: இந்திய கிரிக்கெட்டின் இரண்டு ஜாம்பவான்களான ராகுல் டிராவிட் மற்றும் விவிஎஸ் லக்ஷ்மண் ஆகியோரின் பயிற்சிப் பொறுப்புகளில் பெரிய மாற்றம் வரவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேசிய கிரிக்கெட் அகாடமியின் (NCA) தலைவராக இருக்கும் விவிஎஸ் லக்ஷ்மண் தனது நண்பரான டிராவிட்டுக்கு தனது பதவியை அளித்து, விலக உள்ளதாக கூறப்படுகிறது.
விவிஎஸ் லக்ஷ்மண் மீண்டும் ஐபிஎல் பயிற்சிக்குத் திரும்ப உள்ளதாகவும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சிப் பொறுப்பிலிருந்து சமீபத்தில் விலகிய ராகுல் டிராவிட், மீண்டும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் (தற்போது பிசிசிஐயின் உயர் சிறப்பு மையம்) தலைவராகப் பொறுப்பேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, இளம் வீரர்களை உருவாக்குதல், காயங்களிலிருந்து வீரர்களை மீண்டு வரச் செய்தல், அடுத்த தலைமுறை வீரர்களைத் தயார்படுத்துதல் போன்ற நீண்ட காலத் திட்டங்களுடன் டிராவிட் மீண்டும் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு திரும்புவதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு ஒரு தொடர்ச்சியான பாதையை அமைத்துக் கொடுக்கும் என்று பார்க்கப்படுகிறது.
தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருக்கும் விவிஎஸ் லக்ஷ்மண், ஐபிஎல் தொடரில் பயிற்சிப் பணிகளுக்குத் திரும்புவதற்கான வாய்ப்புகளை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தனது ஆழமான கிரிக்கெட் நுணுக்கங்களுக்கும், வீரர்களை அமைதியாகக் கையாளும் திறமைக்கும் பெயர் பெற்ற லக்ஷ்மண், இதற்கு முன்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
அவரது அனுபவத்திற்கு, பல ஐபிஎல் அணிகள் அவரை தங்கள் பயிற்சிக் குழுவில் இணைத்துக்கொள்ளப் போட்டி போடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் அசைக்க முடியாத மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாகப் பத்தாண்டுகளுக்கும் மேலாக ஒன்றாகக் களமிறங்கிய டிராவிட்டும், லக்ஷ்மணும், தற்போது இந்திய கிரிக்கெட்டின் பயிற்சிக் கட்டமைப்பிலும் முக்கியப் பங்காற்றி வருகின்றனர்.
இந்த இரு ஜாம்பவான்களின் பொறுப்பு மாற்றம், இந்திய அணியின் உள்நாட்டு வளர்ச்சி மற்றும் ஐபிஎல் தொடரின் தேவைகள் ஆகிய இரண்டையும் பூர்த்தி செய்யும் வகையில் அமையும் என பிசிசிஐ வட்டாரம் தெரிவித்து உள்ளது. டிராவிட் - பிசிசிஐ பேச்சுவார்த்தை மற்றும் லக்ஷ்மண் பேச்சுவார்த்தை நடத்தி வரும் ஐபிஎல் அணிகள், தங்களின் ஒப்பந்தங்களை இறுதி செய்தவுடன், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.