
உலகக்கோப்பை கனவு
2013ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்லாமல் உள்ளது. எனவே இந்த முறை சொந்த மண்ணிலாவது கோப்பையை வெல்லுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அதற்கு தயாராகும் வகையில் இந்தாண்டில் இதுவரை நடந்துள்ள நியூசிலாந்து மற்றும் இலங்கையுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடர்களை 3 - 0 என ஒயிட் வாஷ் செய்துள்ளது. இதே போல தற்போது ஆஸ்திரேலியாவுடனான தொடரும் 1 - 1 என சமநிலையில் உள்ளது.

இந்தியாவுக்கு பின்னடைவு
தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்றுள்ள போதும், இந்திய அணிக்கு பின்னடைவுகள் உள்ளன. நட்சத்திர வீரர்கள் ரிஷப் பண்ட், ஜஸ்பிரித் பும்ரா, ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் சஹார் உள்ளிட்டோர் காயம் காரணமாக விளையாடாமல் உள்ளனர் இவர்கள் உலகக்கோப்பைக்குள் தயாராகிவிடுவார்களா என்பது சந்தேகமான ஒன்று தான். இந்நிலையில் இவை குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியுள்ளார்.

டிராவிட் பதில்
அதில், இதுவரை நடந்துள்ள 9 போட்டிகளிலும் எங்களுக்கு தெளிவு கிடைத்துவிட்டது. இதே போன்ற ஒரு தெளிவுடன் இனி பயணிக்க விரும்புகிறோம். தற்போதைக்கு எங்களின் வழக்கமான ப்ளேயிங் 11 இல்லாமல் வித்தியாசமான அணியுடன் தான் ஆடுகிறோம். ஆனால் உலகக்கோப்பையின் போதும் காம்பினேஷன்களை மாற்ற வேண்டிய சூழல்கள் ஏற்பட்டால், இவை உதவியாக இருக்கும்.

குறைவான நேரம்
ஐபிஎல், டெஸ்ட் சாம்பியன்ஷிப் முடிந்தவுடன் மிக குறைவான ஒருநாள் போட்டிகளே தயராவதற்கு இருக்கும். அதுவும் உலகக்கோப்பை இந்தாண்டின் மழைக்காலத்தில் நடைபெறவுள்ளதால் எங்களுக்கு ஏற்ற களங்கள் என்று கூற முடியாது. ஏனென்றால் மழைக்காலத்தில் இருக்கும் சூழலுக்கு ஏற்ப நாங்கள் பயிற்சி பெறப்போவது கிடையாது. தற்போதைக்கு 17 -18 வீரர்களை உலகக்கோப்பைக்காக தேர்வு செய்து வைத்துள்ளோம். அனைவருமே நல்ல ஃபார்முடன் இருக்கிறார்கள். எனவே அப்போதைக்கு என்ன தேவையோ அதை மற்றும் மாற்றி அணியை உருவாக்குவோம் என டிராவிட் கூறியுள்ளார்.

போட்டி அட்டவணை
உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணையை வழக்கமாக ஓராண்டிற்கு முன்பாகவே ஐசிசி வெளியிட்டுவிடும். ஆனால் இந்தாண்டு பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா கிடைக்குமா? இந்திய அரசிடம் வரிவிலக்கு வாங்குவது போன்ற சிக்கல்களால் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும் தற்போது முழுவரியையும் பிசிசிஐ ஏற்றுக்கொண்டதால் விரைவில் போட்டி அட்டவணை வெளியிடப்படும் எனத்தெரிகிறது.


Click it and Unblock the Notifications











