மும்பை: தோனி, சவுரவ் கங்குலி, அனில் கும்ப்ளே ஆகிய மூவரையும் விடவும் விபி சந்திரசேகரின் கீழ் ஆடிய நாட்களை மறக்க முடியாது என்று ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். அதேபோல் சீனியர் வீரர்கள் அதிகமிருந்த அணியை வழிநடத்திய தோனியின் செயல்பாடுகள் தம்மை ஈர்த்துவிட்டதாக கூறிய ராகுல் டிராவிட், கிளென் மெக்ராத்தை எதிர்கொள்வது எளிதாக இருந்ததே இல்லை என்று தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் தன்னிகரற்ற வீரராக திகழ்ந்தவர் ராகுல் டிராவிட். ஓய்வு பெறுவதற்கு முன்னதாக கூட இங்கிலாந்து மண்ணில் 4 சதங்களை விளாசிய ராகுல் டிராவிட், இந்திய அணியின் பயிற்சியாளராக டி20 உலகக்கோப்பையை வென்றார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை உச்சத்திற்கு கொண்டு சென்றவர்களில் ராகுல் டிராவிட் மிக முக்கியமானவர்.

தற்போது ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ராகுல் டிராவிட், சிஎஸ்கே வீரர் அஸ்வினின் யூட்யூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் சுவாரஸ்யமான பக்கங்கள் குறித்து மனம் திறந்திருக்கிறார். குறிப்பாக சச்சின், அசாரூதீன், கங்குலி, தோனி உள்ளிட்ட வீரர்களின் கீழ் ராகுல் டிராவிட் விளையாடி இருக்கிறார்.
இதுகுறித்து ராகுல் டிராவிட் பேசுகையில், கங்குலி, கும்ப்ளே, தோனி ஆகியோரின் தலைமையின் கீழ் அதிகளவிலான கிரிக்கெட்டை விளையாடி இருக்கிறேன். ஆனால் நான் விபி சந்திரசேகர் கேப்டன்சியின் கீழ் விளையாடிய போதுதான் அதிகமாக கற்றுக் கொண்டதாக நினைக்கிறேன். தமிழ்நாட்டில் விபி சந்திரசேகர் தலைமையில் அதிகம் விளையாடியுள்ளேன்.
அவரிடம் எப்போதும் வெற்றிக்கான பசி இருக்கும். தொடக்க காலத்தில் அவரின் கீழ் விளையாடுவதே உற்சாகமாக இருந்தது. அதேபோல் தோனியை சிறந்த கேப்டன் என்று சொல்லலாம். ஏனென்றால் பெரிய வீரர்கள் இருக்கும் அணியை வழிநடத்துவது எளிய விஷயம் அல்ல. அவர் என்னை ஒரு கேப்டனாக ஈர்த்துவிட்டார் என்று சொல்லலாம்.
சவுரவ் கங்குலியை பொறுத்தவரை எந்தக் காரணத்தைக் கொண்டும் வெற்றி பெற வேண்டும் என்று தீவிரமாக இருப்பார். அனில் கும்ப்ளேவை பொறுத்தவரை வீரர்களுக்கு எந்த சொல்ல வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார். அதேபோல் கிளென் மெக்ராத்தின் பிரைம் டைமில் அவரை எதிர்கொண்டு விளையாடியதை மறக்க முடியாது. நான் எதிர்த்து ஆடியதில் மிகச்சிறந்த பவுலர் என்று அவரை சொல்ல முடியும்.
வாசிம் அக்ரம், யூனுஸ் ஆகியோரும் சிறந்த பவுலர்கள் என்றாலும், நான் விளையாட தொடங்கிய போது அவர்கள் இருவரும் பிரைமை கடந்துவிட்டார்கள். அதேபோல் ஸ்பின்னர்களை பொறுத்தவரை முத்தையா முரளிதரன் பவுலிங் கடினமாக இருக்கும். அவரால் இரு பக்கம் ஸ்பின் செய்ய முடியும். அதிலும் முரளிதரன் கொஞ்சம் கூட களைப்படைய மாட்டார். நமது விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பார் என்று கூறியுள்ளார்.