டெல்லி: 2026 டி20 உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சனின் அசத்தலான ஆட்டத்தை இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பாராட்டினார்.கேரளாவைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சாம்சன், அணியில் நிரந்தர இடமின்றித் திணறி வந்தார். எனினும், முக்கியமான மூன்று ஆட்டங்களில் தொடர்ச்சியாக 80 ரன்களுக்கும் மேல் குவித்து, அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.
இதன்மூலம், சாம்சன் இந்த உலகக் கோப்பையில் 'தொடரின் சிறந்த வீரர்' விருதை வென்றார்.பிசிசிஐயின் கர்னல் சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்ற ராகுல் டிராவிட், சாம்சனின் இந்த வெற்றி அவரது கடின உழைப்புக்குக் கிடைத்த பலன் என்றார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர், "சஞ்சு நீண்ட காலமாக அணியில் இருந்து, சில சமயங்களில் சிறப்பாக ஆடினாலும் தன் இடத்தை இழந்திருக்கிறார்."

"அவர் கடும் உழைப்பால் கடைசி மூன்று போட்டிகளில் சிறப்பாக ஒருங்கிணைந்து செயல்பட்டதைப் பார்ப்பது மகிழ்ச்சி. டி20 அணியின் ஆட்டத்தைக் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கோப்பையை வெல்லும் அணி என்ற எதர்பார்ப்புடன் களமிறங்கி போட்டியில் தொடங்கி, கோப்பையையும் வென்றது எளிதல்ல. அழுத்தம் மற்றும் சவால்கள் நிறைந்த இதில், சூர்யாவும் கௌதமும் அதைச் சாதித்ததைப் பார்ப்பது சிறப்பு," என அவர் எடுத்துரைத்தார்.

டிராவிட் இன்று வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றார். இது, 2021-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கொல்கத்தா டெஸ்ட் வெற்றிக்குப் பிறகு சரியாக 25 ஆண்டுகள் ஆகும். நாட்டிற்காக விளையாடி, ஓய்வுக்குப் பின்னரும் பங்களித்ததற்காக நன்றி தெரிவித்தார். "விருது கிடைத்ததில் மகிழ்ச்சி. என் வாழ்க்கையில் கிடைத்த வாய்ப்புகளுக்காகவும், சிறந்த கிரிக்கெட் வீரர்களுடன் விளையாடியதற்காகவும், நாட்டிற்காக உலகைச் சுற்றி வந்ததற்காகவும் நான் பணிவுடன் நன்றி உள்ளவன்," என்று நெகிழ்ந்தார்.

இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சி குறித்து டிராவிட், "அற்புதம்! பல தசாப்தங்களாக எப்படி வளர்ந்துள்ளது என்பதைப் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அசாதாரண திறமைகளையும், சிறந்த நிர்வாகிகளையும், பயிற்சியாளர்களையும் கொண்டது இது. நம்பமுடியாத கட்டமைப்புடன் அதை மேம்படுத்தினோம். உள்நாட்டு கிரிக்கெட்டும், ஜூனியர் கிரிக்கெட்டும் சிறந்த முறையில் செயல்பட்டு வருவதால், திறமை வாய்ந்த வீரர்கள் வருகின்றனர். இதனால் தான் இந்திய அணி வெல்கிறது" என்று டிராவிட் தெரிவித்தார்.