கொல்கத்தா: இந்திய அணி சொந்த மண்ணில் அடுத்தடுத்து படுதோல்விகளைச் சந்தித்து வரும் நிலையில், தன்னைத் தற்காத்துக்கொள்ள கவுதம் கம்பீர் பேசிய பேச்சுக்கு, முன்னாள் வீரர் மனோஜ் திவாரி சம்மட்டி அடி கொடுத்துள்ளார். "நீங்கள் பெருமைப்படும் சாம்பியன்ஸ் டிராபி அணியை உருவாக்கியது நீங்கள் அல்ல; அது டிராவிட், ரோஹித் சர்மா உருவாக்கி வைத்த அணி" என்று அவர் கம்பீரை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவிடம் 0-2 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்த பிறகு, தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். ஆனால், அவர் பதவி விலக மறுத்ததோடு, "ஆசிய கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபியை வென்றுகொடுத்தது நான் தான்" என்று தனது சாதனைகளைச் சுட்டிக்காட்டி தன்னை நியாயப்படுத்திக் கொண்டார்.

கம்பீரின் இந்தப் பேச்சைக் கேட்டு கடுப்பான முன்னாள் வீரர் மனோஜ் திவாரி, தான் அளித்த பேட்டியில் கம்பீரை வறுத்தெடுத்துள்ளார். "கம்பீர் ஆசிய கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபியை வென்றதாகப் பெருமை பேசுகிறார். ஆனால் அந்த வெற்றிக்கான அடித்தளத்தை அமைத்தது அவர் அல்ல. அந்த அணியை கட்டமைத்தது ரோஹித் சர்மா, ராகுல் டிராவிட் மற்றும் அதற்கு முன்பு விராட் கோலி ஆகியோர் தான்.
உண்மையைச் சொல்லப்போனால், அந்த இரண்டு தொடர்களின்போது கம்பீர் பயிற்சியாளராக இல்லாவிட்டாலும் கூட, இந்தியா வெற்றி பெற்றிருக்கும். ஏனென்றால் அந்த அணி ஏற்கெனவே கச்சிதமாக இருந்த அணி" என்று திவாரி பேசியுள்ளார்.
மேலும், "வெள்ளை பந்து கிரிக்கெட்டில் ஆலோசகராக இருந்த ஒருவரை, அனுபவமே இல்லாமல் நேரடியாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமித்தது துரதிர்ஷ்டவசமானது. அடிமட்ட அளவில் பயிற்சியாளராக இருந்த அனுபவம் இல்லாத ஒருவரிடம் இருந்து, உயரிய இடத்தில் முடிவுகளை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்" என்று சாடினார்.
இங்கிலாந்தில் இளம் அணியை வைத்து தொடரை டிரா செய்தேன் என்று கம்பீர் கூறியதற்கும் திவாரி பதிலடி கொடுத்தார். "இங்கிலாந்து தொடரை டிரா செய்தது ஒன்றும் பெரிய சாதனை இல்லை. சொல்லப்போனால் கடைசி நாளில் இங்கிலாந்து வீரர்கள் பொறுப்பற்று 'ஷாட்' ஆடி விக்கெட்டைப் பறிகொடுத்தார்கள். அவர்கள் நினைத்திருந்தால் அந்தத் தொடரை 3-1 என வென்றிருப்பார்கள். கம்பீர் பதவிக்காலத்தில் சொல்லிக்கொள்ளும்படி எந்தச் சாதனையும் இல்லை" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டைக் காப்பாற்ற இதுவே சரியான நேரம். உடனடியாக டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு என்று தனி பயிற்சியாளரை நியமிக்க வேண்டும்" என்று பிசிசிஐக்கு கோரிக்கை விடுத்தார். உதவி பயிற்சியாளர் சிதன்ஷு கோடக், கம்பீரைக் காப்பாற்றுவதற்காகப் பத்திரிகையாளர் சந்திப்பில் வீரர்களைக் குறை கூறியதையும் திவாரி கண்டித்தார்.
"ஒரு நல்ல பயிற்சியாளர் பொதுவெளியில் தனது வீரர்களை விட்டுக்கொடுக்க மாட்டார். கம்பீரைக் காப்பாற்ற அவர் ஏன் அப்படிப் பேசினார் என்று தெரியவில்லை. கம்பீர் மீதான விமர்சனத்திற்கு கம்பீர் தான் பதில் சொல்ல வேண்டுமே தவிர, வீரர்களைப் பலிகடா ஆக்கக்கூடாது" என்று மனோஜ் திவாரி விளாசினார்.