மும்பை : இந்திய அணியில் வீரர்களை தேர்வு செய்யும் போது எவ்வித அரசியலும் இல்லை என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியிருக்கிறார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அஸ்வின் இடம்பெறவில்லை.
இது போன்று பல தருணங்களில் பல வீரர்கள் அணியில் சேர்க்கப்படுவதில்லை. இது குறித்து முதல்முறையாக டிராவிட் மனம் திறந்து பேசி இருக்கிறார். அதில் நான் ஒவ்வொரு வீரருக்கும் பயிற்சி தரும்போது அவர்கள் மீது அக்கறை வைத்திருக்கிறேன்.

அவர்களுடன் தனிப்பட்ட முறையில் ஒரு உறவை ஏற்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். ஒரு பயிற்சியாளராக நான் பார்த்துக் கொள்ளும் வீரர்கள் அனைவரும் வெற்றி பெற வேண்டும் என்று தான் நினைக்கிறேன். ஆனால் உண்மை என்னவென்றால் நாம் பயிற்சி செய்யும் அனைத்து வீரர்களும் வெற்றியாளராக வர முடியாது. சில சமயம் நீங்கள் கடுமையான முடிவுகளை எடுத்து தான் ஆக வேண்டும்.
நாங்கள் அணியை தேர்வு செய்யும் போது சில ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்கின்றோம். எப்போதெல்லாம் ஒரு கிரிக்கட் தொடருக்கு அணியை தேர்வு செய்கிறோமோ, அப்போதெல்லாம் சிலர் அணியில் இடம் பெற முடியாத சூழல் ஏற்படுகிறது. நீங்கள் பலரும் இந்த கிரிக்கெட் வீரர் அணியில் இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். உங்களை போல் நானுமே வருத்தம் தான் படுவேன். ஆனால் யாராலும் சரியான 11 வீரர்களை அணியில் தேர்வு செய்ய முடியாது.
இதுதான் ஒரு பயிற்சியாளராக அணி நிர்வாகியாக எனக்கு இருக்கும் கடினமான பணியாக நான் கருதுகிறேன். அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் தான் எனது ஆசை. ஆனால் உங்களால் 11 வீரர்களை மட்டும் தான் அணியில் தேர்வு செய்ய முடியும். அதுதான் விதி இந்த வீரரை என் தேர்வு செய்யவில்லை என்று கேட்கும்போது அதற்கு பதில் அளிப்பது சுலபம் கிடையாது.
சாகா விஷயத்தில் அணி நிர்வாகம் என்ன நினைக்கிறது என்பதை அவரிடம் நேர்மையாக சொல்லிவிட வேண்டும் என்று தான் நினைத்தேன். எந்த வீரர்களை தேர்வு செய்யும் போதும் அதில் அரசியல் எதுவும் கிடையாது. யாருக்கும் சார்ந்து இல்லாமல் அரசியல் இல்லாமல் நீங்கள் செயல்பட வேண்டும் என்று நினைப்பதே சரியான செயல்பாடு ஆகும். இந்த கொள்கைப்படிதான் நான் செயல்பட்டு கொண்டிருக்கிறேன் என்று டிராவிட் கூறியுள்ளார்.