டிராவிட் மகன் அன்வே 211 ஸ்ட்ரைக் ரேட்.. சேவாக் மகன் ஆர்யாவீர் அதிரடி ஓபனிங்.. U-19 அணியில் அபாரம்
மும்பை: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அண்டர்-19 அணிகளுக்கு இடையிலான அதிகாரப்பூர்வமற்ற முதல் ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களான ராகுல் டிராவிட் மற்றும் வீரேந்திர சேவாக் ஆகியோரின் மகன்கள் ஒரே அணியில் களமிறங்கி பட்டையைக் கிளப்பினர்.
மழை காரணமாக பாதிக்கப்பட்ட இந்தப் போட்டியில், ராகுல் டிராவிட்டின் 17 வயது மகன் அன்வே டிராவிட் 6-வது விக்கெட் கீப்பர் பேட்டராக களம் புகுந்தார். களமிறங்கியது முதலே அசுர வேகத்தில் ரன் குவித்த அவர், வெறும் 18 பந்துகளில் 2 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 38 ரன்கள் விளாசினார். 211.11 என்ற மின்னல் வேக ஸ்ட்ரைக் ரேட்டுடன் ஆடிய அவர், யாஷ்பர்தன் சவுகானுடன் இணைந்து 4-வது விக்கெட்டுக்கு 34 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்தார். யாஷ்பர்தன் சவுகான் இந்திய அணியில் அதிக ரன் குவித்தார். அவர் 34 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களைக் குவித்தது.

மறுபுறம், வீரேந்திர சேவாக்கின் மூத்த மகன் ஆர்யவீர் சேவாக், இந்திய அண்டர்-19 அணியில் தொடக்க வீரராக அறிமுகமானார். தனது தந்தையைப் போலவே தொடக்கத்திலேயே பவுண்டரிகளை அடித்த அவர், 26 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்து சிறப்பான தொடக்கம் தந்தார். கேப்டன் லக்ஷ்யா ராஜேஷுடன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 6.1 ஓவர்களில் 45 ரன்கள் சேர்த்தார்.
முன்னதாக, அன்வே டிராவிட் ஜூலை மாதம் இலங்கைக்கு எதிரான போட்டியில் 67 பந்துகளில் 87 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். ஆர்யவீர் சேவாக் டெல்லி பிரீமியர் லீக் தொடரில் விளையாடி கவனம் ஈர்த்தார். இந்திய கிரிக்கெட்டை ஒரு காலத்தில் ஆண்ட ராகுல் டிராவிட் - வீரேந்தர் சேவாக் கூட்டணியைப் போல, தற்போது அவர்களது வாரிசுகளும் களத்தில் கலக்கி வருவது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று உள்ளது.


Click it and Unblock the Notifications

