பெங்களூர் : அரசியல்வாதிகளின் மகன் அரசியல்வாதிகள் ஆவது போல், சினிமா நட்சத்திரங்களின் மகன் சினிமாவில் ஜொலிப்பது போல், தற்போது கிரிக்கெட் வீரர்களின் மகன்களும் கிரிக்கெட்டில் சாதித்து வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ராகுல் டிராவிட், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 13,000 ரன்களுக்கு மேல் அடித்திருக்கிறார்.
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய டிராவிட்டுக்கு சமித் டிராவிட், அன்வே டிராவிட் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இதில் சமித் டிராவிட் ஏற்கனவே இந்திய அண்டர் 19 அணியில் இடம் பிடித்து உள்ள நிலையில் தற்போது டிராவிட்டின் இளைய மகனும் அபாரமாக விளையாடி வருகிறார்.

16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான கர்நாடகா அணியில் இடம்பெற்றிருக்கும் அன்வே டிராவிட், விஜய் மெர்சண்ட் கோப்பை தொடரில் காலிறுதி ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடினார். இதில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 742 ரன்கள் அடித்திருந்தது. இதில் குரு சிம்ரன் சிங் 230 ரன்கள் குவித்து இருந்தார்.
இந்த நிலையில் கர்நாடகா அணி 130 ரன்னுக்கு இரண்டு விக்கெட் என்ற நிலையில் இருந்த போது 181 ரன்களுக்கு ஆறு விக்கெட் என தடுமாறியது. ஒரு முனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் டிராவிட்டின் மகன் அன்வே டிராவிட் தந்தையை போல் நங்கூரம் போட்டு களத்தில் நின்று பவுலர்களை தனது பேட்டிங் மூலம் வெறுப்பேற்றினார்.
198 பந்துகளை எதிர்கொண்ட அன்வே டிராவிட் சதம் அடித்தார். இதில் 12 பவுண்டரிகள் ஏழாவது விக்கெட்டுக்கு டயல் ஹிமாத்துடன் டிராவிட்டின் மகன் டிராவிட் 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்தார். கர்நாடகா அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 280 ரன்கள் எடுத்த நிலையில் அன்வே டிராவிட் 234 பந்துகளை எதிர் கொண்டு 110 ரன்கள் சேர்த்து இருக்கிறார்.
இதன் மூலம் முதல் இன்னிங்ஸில் கூடுதல் ரன்கள் எடுத்ததன் அடிப்படையில் பஞ்சாப் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்த தொடரில் டிராவிட்டின் மகன் தற்போது இரண்டாவது சதம் அடித்திருக்கிறார். ஏற்கனவே அவர் ஜார்கண்ட் அணிக்கு எதிராக 153 பந்துகளில் சதம் அடித்தார். இந்த தொடரில் கர்நாடகா அணி அதிக ரன்கள் அடித்திருக்கும் வீரர் என்ற பெருமையை அன்வே டிராவிட் படைத்திருக்கிறார். 8 இன்னிங்ஸில் அவர் 459 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் இரண்டு சதம், மூன்று அரை சதம் அடங்கும்.