பெங்களூர்: ஆஸ்திரேலியா யு19 அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய யு19 அணியில் இடம்பிடிக்க அதிகளவிலான கஷ்டங்களை சந்தித்ததாக ராகுல் டிராவிட் மகன் சமித் டிராவிட் கூறியுள்ளார். இந்திய அணியில் இடம்பிடித்தது மகிழ்ச்சியளிப்பதாக கூறியுள்ள சமித் டிராவிட், வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் ஆஸ்திரேலியா யு19 அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. செப்.21ஆம் தேதி முதல் செப்.26ஆம் தேதி வரை ஒருநாள் தொடரும், செப்.30 முதல் அக்.10 வரை டெஸ்ட் தொடரும் நடக்கவுள்ளது. இதற்காக புதுச்சேரி மற்றும் சென்னை மைதானங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

ஆஸ்திரேலியா யு19 அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய யு19 அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த அணியில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ராகுல் டிராவிட் மகன் சமித் டிராவிட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆல்ரவுண்டரான சமித் டிராவிட் வினோ மன்கட் டிராபி மற்றும் கூச் பெஹார் டிராபி ஆகிய தொடர்களில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
கூச் பெஹார் டிராபியில் விளையாடிய சமித் டிராவிட் 10 இன்னிங்ஸில் 3 அரைசதம் உட்பட 362 ரன்களை விளாசியுள்ளார். அதேபோல் 8 போட்டிகளில் விளையாடிய சமித் டிராவிட் 16 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். அதேபோல் வினோ மன்கட் டிராபி தொடரில் 4 போட்டிகளில் விளையாடிய சமித் டிராவிட், 122 ரன்களும், 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் கூச் பெஹார் டிராபியை கர்நாடகா அணி கைப்பற்ற முக்கிய காரணமாக சமித் டிராவிட் அமைந்தார். அதேபோல் மகாராஜா டிராபி டி20 தொடரில் 7 போட்டிகளில் விளையாடிய சமித் டிராவிட், 82 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். தொடர்ச்சியாக மீடியா வெளிச்சம் சமித் டிராவிட் மீது விழுந்த நிலையில், அவர் தற்போது இந்திய யு19 அணியிலும் தேர்வாகியுள்ளார்.
இதுகுறித்து சமித் டிராவிட் பேசுகையில், இந்திய யு19 அணியில் தேர்வாகி இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி. இந்த நேரத்தில் பெருமையாக உணர்கிறேன். இந்த இடத்தை எட்டுவதற்கு தொடர்ச்சியாக பல்வேறு சிரமங்களை சந்தித்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். மகாராஜா டிராபியில் விளையாடிய போது இதனை பேசி இருக்கிறார்.
18 வயதாகும் சமித் டிராவிட், ஆஸ்திரேலியா ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி அசத்தினால், நிச்சயம் ஐபிஎல் தொடருக்கான ஒப்பந்தம் கிடைக்க வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. ஒருவேளை சமித் டிராவிட் ஐபிஎல் ஏலத்திற்கு வந்தாலே, ராகுல் டிராவிட்டின் பிராண்ட் காரணமாக அந்த அணிக்கு கூடுதல் கவனம் கிடைக்கும்.
இதனால் சச்சின் மகனை தொடர்ந்து ராகுல் டிராவிட்டின் மகனும் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் இவர்கள் இருவருமே வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் என்பது தான். இது ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும், சமித் டிராவிட் ஐபிஎல் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டால், அவரை வாங்க ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகள் போட்டி போட வாய்ப்பு இருப்பதாக விவாதங்கள் நடந்து வருகின்றன.