டெல்லி: இந்த டி20 உலக கோப்பை தொடரில் அட்டகாசமாக விளையாடி வரும் இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. இதே வெஸ்ட் இண்டீஸில் தான் டிராவிட் தலைமையிலான இந்தியா 2007இல் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பையில் க்ரூப் சுற்றில் வெளியேறியது. இப்போது 17 ஆண்டுகளுக்குப் பிறகு அதே டிராவிட் பயிற்சியாளராக இந்திய அணியை இறுதிச் சுற்றுக்கு அழைத்துச் சென்று இருக்கிறார்.
வெஸ்ட் இண்டீஸில் நடக்கும் டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இதே வெஸ்ட் இண்டீஸில் தான் நாம் 2007இல் உலகக் கோப்பையில் க்ரூப் சுற்றுடன் வெளியேறி இருப்போம்.

டிராவிட்: அந்த உலகக் கோப்பை தொடரில் டிராவிட் தலைமையிலான இந்திய அணி களமிறங்கியது. அதில் சச்சின், கங்குலி, சேவாக், ஜாகீர் கான் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். இந்தளவுக்கு பவர்புல் டீமாக இருந்த போதிலும் இந்திய அணி அந்த உலகக் கோப்பையில் க்ரூப் ஸ்டேஜிலேயே வெளியேறியது. அந்த உலகக் கோப்பையில் பெர்முடா அணியுடன் மட்டுமே இந்தியாவால் வெல்ல முடிந்தது. இலங்கை மட்டுமின்றி வங்கதேச அணியுடன் கூட இந்தியா அந்த உலகக் கோப்பையில் தோல்வி அடைந்தது.
இலங்கைக்கு எதிரான போட்டியில் 50 ஓவர்களில் முதலில் பேட் செய்த இலங்கை 255 ரன்களை எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த இந்தியா 185 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்து இரண்டாவது போட்டியில் மட்டும் பெர்முடா அணிக்கு எதிராக 257 ரகன்கள் வித்தியாசத்தில் வென்றது. மூன்றாவது போட்டியில் மீண்டும் வங்கதேசத்திற்கு எதிராகப் படுதோல்வி.. அந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா 191க்கு ஆல் அவுட் ஆனது. அடுத்து பேட்டிங் செய்த வங்கதேசம் 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.
படுதோல்வி: இந்த தோல்விகளால் இந்தியா க்ரூப் சுற்றிலேயே வெளியேறியது. வலிமையான பேட்டிங்க் ஆர்டர் இருந்த போதிலும், அனைத்து பேட்ஸ்மேன்களும் சொதப்பியதே இந்த படுதோல்விக்கு காணமாகும். அந்த உலகக் கோப்பை இந்தியாவுக்கு மறக்க வேண்டிய உலகக் கோப்பையாகவே இருந்தது. முந்தைய உலகக் கோப்பையில் இறுதிச் சுற்று வரை சென்றுவிட்டது இதில் க்ரூப் சுற்றிலேயே வெளியேறியதை ரசிகர்களால் ஏற்க முடியவில்லை. இந்த படுதோல்விக்குப் பொறுப்பேற்று டிராவிட் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு தோனி கேப்டன் ஆனது தனிக்கதை.
அதன் பிறகு 17 ஆண்டுகள் ஓடிவிட்டது.. இப்போது இந்தியா அணி மீண்டும் உலகக் கோப்பைக்குச் சென்றுள்ளது. அதே டிராவிட் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்குச் சென்றுள்ளார். ஆனால், இந்த முறை அவர் பயிற்சியாளராகச் சென்றுள்ளார். ரோஹித் தலைமையில் களமிறங்கிய இந்தியா அணி அங்கே தாறுமாறாக ஆடி வருகிறது.
இந்தியா: லீக் சுற்றில் நான்கு போட்டிகள், சூப்பர் 8 சுற்றில் 3 போட்டிகள், இப்போது அரையிறுதி என்று 8 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையவில்லை. க்ரூப் சுற்றில் கனடாவுக்கு எதிரான போட்டி மட்டும் மழையால் கைவிடப்பட்டது. மற்ற அனைத்து போட்டிகளிலும் இந்தியா வெற்றியைப் பெற்றுள்ளது. அதுவும் நெருக்கத்தில் வந்த வெற்றிகள் இல்லை.. அனைத்துமே எதிராளிகளைத் தும்சம் செய்யும் வகையிலான வெற்றிகளாக இருக்கிறது.
டிராவிட் பங்கு: ரோஹித் தலைமையிலான இந்திய டீம் பெற்ற இந்த தாறுமாறு வெற்றிக்குப் பயிற்சியாளரான டிராவிட் முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது. அவர் வகுத்துக் கொடுக்கும் திட்டங்கள், இளம் வீரர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்பு தருவது டீமிற்கு பெரியளவில் கை கொடுக்கிறது. மேலும், ஒரு தரப்பை மட்டும் நம்பாமல் இளம் வீரர்கள் மற்றும் சீனியர் வீரர்கள் என இரு தரப்பையும் சரிவர டீமிற்குள் கொண்டு வந்ததும் இந்திய அணிக்குப் புதுவித டைமென்ஷனை கொடுத்துள்ளது.
இப்படி உலகக் கோப்பை தொடரில் மொத்தமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. சிங்கம் அடிபட்டு இருந்தாலும் தனது கெத்தை இழக்காமல் எப்படி மீண்டும் தன்னை நிரூபிக்குமோ.. அதேபோல டிராவிட் அதே வெஸ்ட் இண்டீஸில் தன்னை நிரூபித்து இருக்கிறார்.