ஜெய்ப்பூர்: 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி டி20 வரலாற்றின் இரண்டாவது அதிவேக சதத்தை அடித்து கிரிக்கெட் உலகை மிரள வைத்தார். அவர் சதம் அடித்தபோது, ஒட்டுமொத்த மைதானமும் எழுந்து நின்று அவருக்காக கைத்தட்டியது. சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த ராகுல் டிராவிட் எழுந்து நின்று கைதட்டினார். அதைப் பார்த்து ரசிகர்கள் மெய்சிலிர்த்துப் போனார்கள்.
ராகுல் டிராவிட்டுக்கு காலில் காயம் ஏற்பட்டு நடக்க முடியாத சூழ்நிலை உள்ளது. எனினும், அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராகப் பணிபுரிய வேண்டி, சக்கர நாற்காலியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் பயணம் செய்து அவர்களை வழிநடத்தி வருகிறார். இந்த நிலையில்தான், 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி டிராவிட் தன் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையிலும், இந்திய கிரிக்கெட்டை புரட்டிப் போடும் வகையிலும் அதிரடி ஆட்டத்தை ஆடினார்.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 210 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி ஆடியது. அப்போது துவக்க வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக ஆடினார். 35 பந்துகளில் சதம் அடித்தார். ஏழு பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்கள் அடித்திருந்தார். அவரது ஆட்டத்தைப் பார்த்து ஒட்டுமொத்த மைதானமும் மிரண்டு போயிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் அனுபவ பந்துவீச்சாளர்களான முகமது சிராஜ், இஷாந்த் சர்மா, ரஷீத் கான் ஆகியோரது பந்துவீச்சை அடித்து துவம்சம் செய்து கொண்டிருந்தார் வைபவ் சூர்யவன்ஷி. அவர் சதம் அடித்தபோது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் டக் அவுட்டில் அமர்ந்திருந்த அத்தனை வீரர்களும் எழுந்து நின்று கைத்தட்டினார்கள். ஒட்டுமொத்த மைதானமும் எழுந்து நின்று அவரை பாராட்டியது. அப்போது சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த ராகுல் டிராவிட் எழுந்து நின்று கைதட்டினார். அதைப் பார்த்த ரசிகர்கள் மெய்சிலிர்த்தனர்.
2025 ஐபிஎல் ஏலத்தில் வைபவ் சூர்யவன்ஷியை வாங்கியாக வேண்டும் என பிடிவாதமாக இருந்தது ராகுல் டிராவிட்தான். அவருக்காக ஏலத்தில் போட்டி போட்டு ரூ. 1.1 கோடிக்கு அவரை வாங்கினார் ராகுல் டிராவிட். அப்போது சிலர், 14 வயது வீரருக்கு இத்தனை தூரம் ராகுல் டிராவிட் போட்டி போடுவது ஏன்? என விமர்சனம் செய்திருந்தனர்.
ஆனால், அதே வைபவ் சூர்யவன்ஷிக்கு இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலேயே விளையாடுவதற்கு வாய்ப்பு அளித்து, அவரது மூன்றாவது இன்னிங்ஸிலேயே சதம் அடிக்கவும் முக்கிய காரணமாக இருந்திருக்கிறார் ராகுல் டிராவிட். வைபவ் சூர்யவன்ஷியின் இந்த அதிரடி ஆட்டத்தால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15.5 ஓவர்களிலேயே 211 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டி, மாபெரும் வரலாற்று வெற்றியையும் பதிவு செய்தது.