
இந்தியாவின் மானம் காத்த மாவீரன்
இத்தனைக்கும், சச்சின், கங்குலியைவிடவும், வெளிநாட்டு பிட்சுகளிலும், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான பிட்சுகளிலும் இந்திய மானத்தை காப்பாற்றிவந்தது ராகுல் டிராவிட்தான். இக்கட்டான நேரத்தில் தனியாளாக நின்று போராடும் போர்வீரன் ராகுல். டெஸ்ட் மேட்சுக்கென்றே பெற்றுப்போட்ட பிள்ளைபோல மைதானத்தில் வீடு கட்டி ஆடுவார் நம்ம ராகுல் டிராவிட். 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13ஆயிரத்து 288 ரன்களை குவித்த டிராவிட்டின் சராசரி ரன்கள் 52.31. அதாவது, அரை சதத்துக்கும் சற்று அதிகம். ஒருநாள் போட்டிக்கான அணியில் சேர்த்தபோது முதலில் தடுமாறினாலும் பின்னர் சுதாரித்துக்கொண்டு பட்டையை கிளப்பியவர்தான் ராகுல் டிராவிட். 344 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10 ஆயிரத்து 899 ரன்களை எடுத்துள்ளார்.

கீப்பராகவும் சாதனை
அது டோணி களம்கானாத காலம் என்பதால், பெரிய அணிகளுடன் மோதும்போது விக்கெட் கீப்பராக டிராவிட் கைகளில் உறையை மாட்டிவிட்டுவிடுவார்கள். விக்கெட் கீப்பராகவும் திறம்பட செயல்பட்டுள்ள டிராவிட், 'ஸ்லிப்' பகுதியில் அரண்போல நின்று கேட்ச் பிடிப்பதிலும் வல்லவர். டெஸ்ட் போட்டிகளில் 210, ஒரு நாள் போட்டிகளில் 194 கேட்சுகளைபிடித்துள்ள டிராவிட், 14 பேட்ஸ்மேன்களை ஸ்டெம்பிங் செய்து விக்கெட் கீப்பிங் திறமையை பறைசாற்றியுள்ளார்.

தடுப்பு சுவர்
வேகப்பந்தை கண்டால் தொடை நடுங்கிய இந்திய வீரர்கள் நிறைந்த அப்போதைய அணியில், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா என வேகப்பந்து வீச்சுக்கு பெயர் பெற்ற நாடுகளுக்கு எதிரான பந்தையங்களில் சொல்லி அடிக்கும் கில்லியாக களமாடியவர் ராகுல் டிராவிட். "எப்போய்யா இந்த ஆளு அவுட் ஆவாரு" என எதிரணி பவுலர்களை புலம்ப செய்தவர். அரை கிலோமீட்டர் தூரத்தில் இருந்து ஓடிவந்து அசுர வேகத்தில் எறியும் பந்தையும் அலட்டிக் கொள்ளாமல் இடது காலை முன்வைத்து பேட்டால் அப்படியே அமுக்கிவிடும் ராகுலின் ஆட்டத்தை பார்க்க கண்கோடி வேண்டும். "ஓடிவந்து டயர்ட் ஆனதுதான் மிச்சம்" என்று புலம்பிக்கொண்டே திரும்புவார்கள் எதிரணி வேகப்பந்து வித்தகர்கள்.

என்ன செய்தோம் டிராவிட்டிற்கு?
இப்படிப்பட்ட ஜாம்பவான் பேட்ஸ்மேனுக்கு கிடைத்ததெல்லாம் ஏமாற்றமும், கவுரவ குறைச்சலும்தான். ஆல மரத்துக்கு அடியில் வேறு மரங்கள் வளர முடியாது என்ற முதுமொழிக்கு ஏற்ப, சச்சின் டெண்டுல்கர் என்ற அதிரடி நாயகனின் முன்னால் ராகுல் டிராவிட்டின் ஒன்மேன் ஷோ கண்டுகொள்ளாமல்விடப்பட்டுவிட்டது. திறமையாளர்கள் அனைவரையும் ஆதரிக்காமல் ஒருதலைபட்சமாக ஒரு சிலரை மட்டுமே ஆதரிக்கும் ரசிகர் கூட்டம் கொண்ட இந்திய நாட்டில் இப்படி நடந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

எதற்கும் கலங்காதவர்
ஆனால் கிரிக்கெட் வாரியமும்கூட ராகுல் டிராவிட்டை பத்தோடு பதினோராவது வீரராக பார்த்ததுதான் ஏமாற்றம். அவருக்காக பெரிய பாராட்டுவிழா இல்லை, பிரிவு உபச்சாரம் இல்லை. ஆயினும் டிராவிட்டின் முகத்தில் அப்போதும், இப்போதும் அதே குழந்தை புன்னகை தவழ்கிறது.

தோல்வியுடன் டாட்டா சொன்னார்
சச்சின் டெண்டுல்கர் பேர்வேல் மேட்சில் இந்தியா வெற்றிபெற்றேயாக வேண்டும் என்று அவசரகதியில் வலுவற்ற மே.இந்திய தீவுகள் அணியை இந்தியா அழைத்து வந்து விளையாட செய்தது கிரிக்கெட் வாரியம். "நாங்கள் அடிப்பதுபோல அடிப்போம், நீயும் அழுவதுபோல அழு" என்று சொன்னதைப்போல மேற்கிந்திய தீவுகள் அணியும் தோற்றது. 'வெற்றி'யுடன் விடைபெற்றார் சச்சின். ஆனால் டிராவிட் கடைசியாக விளையாடிய டெஸ்ட் மேட்ச், ஒருநாள் போட்டி, சர்வதேச டி20, சாம்பியன் லீக் டி20 அனைத்திலும் அவர் சார்ந்த அணி தோற்றுதான்போனது. ஐபிஎல் போட்டியிலும் ராகுலின் பிரிவு தோல்வியுடனே இருந்தது. இதற்கு பிறரை குறை கூற முடியாது என்பதால் விதியைத்தான் நொந்து கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications











