சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளரும், தடுப்புச்சுவர் பேட்ஸ்மேன் என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட் எப்படி தான் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை ஏற்றேன் என்பது பற்றி பேசி இருக்கிறார்.
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை ஏற்க முதலில் தனக்கு விருப்பம் இல்லை என்றும், தனது மனைவி விஜிதாவின் அறிவுரையால்தான் அந்தப் பொறுப்பை ஏற்றதாகவும் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் உடனான ஒரு கலந்துரையாடலில் அவர் இந்த சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்து கொண்டார்.

2021-ம் ஆண்டு ரவி சாஸ்திரியிடமிருந்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்ற ராகுல் டிராவிட், தனது பதவிக்காலத்தின் கடைசி தொடரான 2024 டி20 உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்தார். இந்தச் சூழலில், பயிற்சியாளர் பதவிக்கு வருவதற்கு முன்பு தனது மனநிலை எப்படி இருந்தது என்பது குறித்து அவர் மனம் திறந்துள்ளார்.
தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) இளம் வீரர்கள் மற்றும் இந்தியா 'ஏ' அணிக்கு பயிற்சியளிப்பதை தான் மிகவும் ரசித்துச் செய்ததாக டிராவிட் குறிப்பிட்டார். அந்தப் பணி, தனது குடும்ப வாழ்க்கைக்கு ஏற்ற சமநிலையை அளித்ததாக அவர் கூறினார். "உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இந்திய சீனியர் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கும் எண்ணம் எனக்கு இல்லை. நான் அப்போது பயிற்சியளிப்பதை மிகவும் மகிழ்ச்சியாக செய்து கொண்டிருந்தேன். டெல்லி ஐபிஎல் அணி மற்றும் இந்தியா 'ஏ', 19 வயதுக்குட்பட்டோர் அணிகளுக்குப் பயிற்சியளிப்பது எனக்குப் பிடித்திருந்தது," என்று டிராவிட் தெரிவித்தார்.
குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட முடியாதது, பயிற்சியாளர் பதவியில் உள்ள மிகப்பெரிய சவால் என்று அவர் குறிப்பிட்டார். "பயிற்சியாளர் பணியின் காரணமாக நீண்ட காலம் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்க வேண்டியிருக்கும். இது குடும்பத்தினருக்கு மிகவும் கடினமானது. இந்திய அணியின் பயிற்சியாளர் வாய்ப்பு திடீரென வந்தபோது, நான் தயங்கினேன். ஆனால், என் மனைவி விஜிதா, 'உங்களுக்கு உயர் மட்டத்தில் பயிற்சியளிப்பதில் ஆர்வம் இருக்கிறது. சில வருடங்கள் இந்தப் பொறுப்பை ஏற்றுச் செய்யுங்கள்' என்று ஊக்கப்படுத்தினார்," என டிராவிட் கூறினார்.
மனைவியின் இந்த உந்துதலே தனது முடிவை மாற்றியதாகவும், அதன் பின்னரே இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் என்ற மிகப்பெரிய பொறுப்பை ஏற்றதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த பயிற்சியாளர்களில் ஒருவராக ராகுல் டிராவிட் பாராட்டப்பட்டு வருகிறார். ஒருவேளை அவர் பயிற்சியாளர் பதவியை ஏற்காமல் போயிருந்தால் நிச்சயம் அது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.