
பெங்களூரு: கர்நாடகாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் லோகேஷ் ராகுல், பாலிவுட் நடிகை நிதி அகர்வாலுடன் சமீபத்தில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இருவரும் காதலிக்கிறார்களா என்ற சந்தேகத்தை இது எழுப்பியுள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த லோகேஷ் ராகுல், சமீபத்தில் முடிந்த ஐபிஎல்லில் பஞ்சாப் அணிக்காக விளையாடினார். 14 ஆட்டங்களில் 659 ரன்கள் குவித்தார். 6 அரை சதம் அடித்தார். அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 95 ரன்கள் எடுத்தார்.

டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 14 பந்துகளில் 50 ரன்கள் அடித்து, ஐபிஎல்லில் அதிகவேக அரைசதம் என்ற சாதனையை புரிந்தார்.
இந்த நிலையில், பிரபல நடிகை நிதி அகர்வாலுடன் சமீபத்தில் நிகழ்ச்சிகளில் ராகுல் கலந்து கொண்டார். ஹிந்தி படங்களில் நடித்துள்ள நிதி அகர்வால், தெலுங்கு மொழியில் நடித்துள்ள படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார்.
இருவரும் ஒரு இரவு விருந்தில் ஜோடியாக கலந்து கொண்டனர். அதனால், இருவரும் காதலிக்கிறார்களா என்ற சந்தேகம் எழுந்தது.
இந்திய கிரிக்கெட் வீரர்கள், நடிகைகள் இடையே காதல், திருமணம் என்பது பாரம்பரியமாக நடந்து வருகிறது. அந்த வரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லியும், நடிகை அனுஷ்கா சர்மாவும் நீண்டகாலம் காதலித்து, திருமணம் செய்துள்ளனர்.
ஆனால், காதலும் இல்லை, கத்தரிக்காயும் இல்லை என்கிறார் நிதி அகர்வால். நாங்க சின்னப் புள்ளையா இருக்கும்போதில் இருந்தே நண்பர்கள். அந்த நட்பு தொடர்கிறது. நட்புடன்தான் நிகழ்ச்சியில் பங்கேற்றோம் என்று நிதி அகர்வால் கூறியுள்ளார்.