துபாய் : நேற்றைய ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா, ஆப்கன் அணிக்கு எதிராக ஆடியது. அந்த போட்டி டையில் முடிந்தது.
அந்த போட்டியில் இந்தியா சறுக்குவதற்கு முக்கிய காரணமாக இருந்தது அம்பயரின் தவறான தீர்ப்புகள் தான்.

தோனி மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் அம்பயர் அளித்த தவறான LBW முடிவால் வெளியேறினர். இதனால், இந்தியா விக்கெட்களை அடுத்தடுத்து இழந்து தவித்து வந்தது.
இவர்கள் இருவரும் ரிவ்யூ கேட்டு இருக்கலாமே? என நீங்கள் நினைத்தால் அங்கே தான் ஒரு திருப்பம். துவக்க வீரராக நேற்று ஆடிய ராகுல் நன்றாக ஆடி அரைசதம் அடித்தார்.
இடையே அவர் ஒரு தவறான ஷாட் ஆட, பந்து அவரது காலில் பட்டது. அதற்கு LBW அவுட் கொடுத்து விட்டார் அம்பயர். ராகுல் அதற்கு ரிவ்யூவை பயன்படுத்தினார். ஆனால், அது அவுட் தான் என தெரிந்ததால், இருந்த ஒரு ரிவ்யூவும் வீணானது. அப்போது இந்தியா 127க்கு 2 விக்கெட்கள் இழந்து இருந்தது.
ராகுல் ரிவ்யூவை வீணாக்கி விட்டதால், அடுத்து தோனி, தினேஷ் கார்த்திக் ஆகியோர் அம்பயர் முடிவுக்கு எதிராக ரிவ்யூ கோர முடியவில்லை. இது இந்தியாவிற்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.
இது பற்றி பேசிய ராகுல், "ஒரே ஒரு ரிவ்யூ என்பது கொஞ்சம் சிரமமானது தான். இப்போது நான் பார்க்கும் போது, அந்த ரிவ்யூவை கேட்டு இருக்க வேண்டாம் என தோன்றுகிறது" என தன் செயலை பற்றி கூறினார்.