மும்பை: 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த ராகுல் திரிபாதி, சரியாக ரன் குவிக்கவில்லை. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் திட்டங்கள் பெரும் குளறுபடியானது. அந்த அணியின் பேட்டிங் வரிசையில் தொடர்ந்து மாற்றங்கள் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆனால் ஐபிஎல் தொடர் முடிந்தவுடன், ராகுல் திரிபாதி மகாராஷ்டிரா பிரீமியர் லீக் (MPL) தொடரில் 'கோலாபூர் டஸ்கர்ஸ்' என்ற அணியின் கேப்டனாக முதல் போட்டியிலேயே அதிரடியாக ஆடி இருக்கிறார். அவர் 18 பந்துகளில் 32 ரன்களைச் சேர்த்து, 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் அடித்து இருந்தார்.

இதைப் பார்த்த சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். இப்படி அதிரடியாக ஆடக்கூடிய வீரர் எதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மோசமாக விளையாடினார் எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு முன் அவர் கடைசியாக விஜய் ஹசாரே டிராபியில் விதர்பா அணிக்கு எதிராகவும் அதிரடியாக ஆடி இருந்தார். அந்தப் போட்டியில் ராகுல் திரிபாதி 19 பந்துகளில் 27 ரன்களைச் சேர்த்து இருந்தார்.
இவ்வாறாக சிஎஸ்கே அணிக்காக ஆடுவதற்கு முன்பும், சிஎஸ்கே அணிக்காக ஆடி முடித்த பிறகும் ராகுல் திரிபாதி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மோசமான ஆட்டத்தை அளித்திருக்கிறார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராகுல் திரிபாதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்து 5 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். அந்த ஐந்து போட்டிகளில் அவர் மொத்தமே 55 ரன்கள் தான் எடுத்திருந்தார். அதிகபட்சமாக ஒரு போட்டியில் 23 ரன்கள் எடுத்திருந்தார். மேலும், அவரது ஸ்ட்ரைக் ரேட் 96.49 என்பதாக இருந்தது. அவரது ஐபிஎல் வரலாற்றிலேயே இதுவே மோசமான செயல்பாடாக அமைந்தது.
ராகுல் திரிபாதி சிஎஸ்கே அணி தவிர்த்து தனது மாநில அணிக்காக விளையாடும் போது அதிரடியாக ஆடி வருவதைப் பார்த்து சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரை சிஎஸ்கே அணியிலிருந்து நீக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தவர்கள் இப்போது அவரது அதிரடி ஆட்டத்தைப் பார்த்து ஆச்சரியமும் அடைந்துள்ளனர்.
எனினும், ராகுல் திரிபாதி அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட மாட்டார் என்று கருதப்படுகிறது. அவர் நீக்கப்படவே அதிக வாய்ப்பு உள்ளது. சிஎஸ்கே அணி 2025 ஐபிஎல் தொடரில் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து வெளியேறி இருந்தது குறிப்பிடத்தக்கது.