
முதல் இன்னிங்ஸ் ஆட்டம்
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி வெறும் 183 ரன்களுக்கு சுருண்டது. சிறப்பாக பந்துவீசிய பந்துவீசிய இந்திய பவுலர்கள் பும்ரா மற்றும் ஷமி முறையே 4 மற்றும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் அதிகபட்சமாக 84 ரன்கள் அடித்தார். அவருக்கு பார்ட்னர்ஷிப் கொடுத்து சிறப்பாக ஆடிய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா அரைசதம் (56 ரன்கள்) விளாசினார்.

இங்கிலாந்து பேட்டிங்
முதல் இன்னிங்ஸில் சற்று அசால்டாக விளையாடிய இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து சரிவை சந்தித்தது. ஆனால் 2வது இன்னிங்ஸில் சுதாரித்துக்கொண்டு மிகப்பொருமையாக ரன்களை சேர்த்துள்ளது. தொடக்க வீரர்கள் ராரி பேர்ன்ஸ் 18 ரன்களும், சிப்லே 28 ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். அதன் பிறகு ஜோடி சேர்ந்த ஜோ ரூட், பேர்ஸ்டோ ஜோடி சீரான வேகத்தில் ரன்களை உயர்த்தினர். கேப்டன் ஜோ ரூட் 14 பவுண்டரிகளுடன் சதம் (109) அடித்து அசத்தினார்.பேர்ஸ்டோ 4 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் சேர்த்தார்.

போட்டி இலக்கு
இறுதியில் இங்கிலாந்து அணி 303 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா ஏற்கனவே 95 ரன்கள் முன்னிலையில் இருந்ததால் 209 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் எடுத்திருந்த போது 4ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் வெற்றியை தீர்மாணிக்கும் 5வது நாள் ஆட்டம் இன்று தொடங்கவிருந்தது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இந்திய அணி இன்னும் 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சூழல் இருக்கும் நிலையில் 5ம் நாள் ஆட்டம் மழையின் காரணமாக இன்னும் தொடங்கவே இல்லை. இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு தொடங்க வேண்டிய இந்தப்போட்டி இன்னும் தொடங்கப்படாமலேயே உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வந்ததால் இனி ஆட்டம் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

வானிலை
இந்நிலையில் நாட்டிங்ஹமில் மழைப்பொழிவு சற்று நின்றுள்ளது. போட்டி அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு போட்டி தொடங்கப்படவுள்ளது. எனினும் அந்நாட்டின் வானிலை அறிக்கைப்படி இன்று முழுவதும் மழை இருக்கும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மழையின் குறுக்கீடு மீண்டும் வரலாம்.

இந்தியாவுக்கு பின்னடைவு
தொடர்ந்து மழைப்பெய்து வருவது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம். ஏனென்றால் மழைப்பெய்து பிட்ச்சானது ஈரப்பதம் அதிகமானால் பேட்டிங் செய்வது மிக கடினமான ஒன்றாக இருக்கும். டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இதே நிலை இருந்ததால், வேகப்பந்துவீச்சாளர்கள் இந்தியாவின் விக்கெட்டை சுலபமாக எடுத்தனர். எனவே இந்த போட்டியிலும் அதே போன்று நடந்து வருவதால் விராட் கோலிக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications