பாதுல்லா, வங்கதேசம்: இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் போட்டி முற்றிலும் மழையால் நாஸ்தியாகிப் போனது. கடைசியில் போட்டி டிராவில் முடிந்தது.
போட்டியின் ஐந்து நாட்களுமே மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் போட்டி டிராவில் முடிந்ததில் ஆச்சரியம் இல்லை. தற்போது இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடருக்கு தயாராகப் போகின்றனர. முதல் போட்டி ஜூன் 18ம் தேதி டாக்காவில் நடைபெறவுள்ளது. இந்தத் தொடருக்காக கேப்டன் டோணி திரும்புகிறார்.

முன்னதாக வங்கதேசம் தனது முதல் இன்னிங்ஸை 256 ரன்களுக்கு இழந்தது. வங்கதேசத்தை சீர்குலைத்தது அஸ்வினின் சுழற்பந்து வீச்சு 5 விக்கெட்களைச் சாய்த்தார் அஸ்வின். அதேபோல கம்பேக் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதனால் இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 206 ரன்கள் குறைவாக எடுத்த வங்கதேசம் பாலோ ஆன் பெற்று 2வது இன்னிங்ஸைத் தொடர்ந்தது. 23 ரன்கள் எடுத்த நிலையில் போட்டி நாள் முடிவுக்கு வந்ததால் டிராவில் முடிவதாக அறிவிக்கப்பட்டது.
வங்கதேசத்தைப் பொறுத்தவரை இம்ருல் கயஸ் மட்டுமே அதிகபட்சமாக 72 ரன்கள் எடுத்தார். லிட்டன் குமார் தாஸ் 34 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். செளம்யா சர்க்கார் 37 ரன்கள் எடுத்தார்.
ஆனால் இன்று அஸ்வினின் நாள் என்பதால் யாருமே நீடிக்க முடியவில்லை. சுழலில் சிக்க வைத்து அசத்தி விட்டார் அஸ்வின்.
ஹர்பஜன் சாதனை
ஹர்பஜன் சிங் இன்று தனது 415வது டெஸ்ட் விக்கெட்டைச் சாய்த்தார். இதன் மூலம் வாசிம் அக்ரம் வைத்திருந்த 414 விக்கெட்கள் சாதனையை தாண்டினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய வீரர்கள் வரிசையில் தற்போது 9வது இடத்தில் இருக்கிறார் ஹர்பஜன் சிங்.
சுருக்கமான ஸ்கோர்:
முதல் இன்னிங்ஸ்: இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 462 ரன்கள். முரளி விஜய் 140, தவன் 173. அஜிங்கியா ரஹானே 98.
வங்கதேசம் - 256 ஆல் அவுட்.
2வது இன்னிங்ஸ்
வங்கதேசம்: விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள்.