ஹைதராபாத்: ரெய்னா ஷாட் பிட்ச் பந்துகளை எதிர்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்று முன்னாள் ஜாம்பவான் பேட்ஸ்மேன் விவிஎஸ் லட்சுமணன் தெரிவித்துள்ளார். எல்லா பேட்ஸ்மேன்களுக்கும் வீக்னஸ் ஏரியா ஒன்று இருக்கும் என்றும், ரெய்னா அதற்கு விதிவிலக்கு இல்லை என்றும் லட்சுமணன் குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா செல்லும் இந்திய ஒருநாள் அணியில் இருந்து அதிரடி வீரர் சுரேஷ் ரெய்னா கழற்றிவிடப்பட்டுள்ளார். வேகப்பந்துக்கு சாதகமான ஆஸி. மைதானங்களில் வரும் பவுன்சர்களை ரெய்னாவால் சமாளிக்க முடியாது என்பது இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் லட்சுமணன் கூறுகையில், "சுரேஷ் ரெய்னா ஷாட் பிட்ச் பந்துகளில் திணறுவது உண்மைதான். ஆனால், அவரை மட்டுமே குறை கூறுவது சரி கிடையாது. எல்லா பேட்ஸ்மேன்களுக்கும், ஏதாவது ஒரு வீக் பகுதி இருக்கும்.
கோஹ்லி, ரோகித் ஷர்மா போன்றோருக்கு, ஆப் ஸ்டம்புக்கு வெளியே போகும் பந்துகள் இடைஞ்சலானவை. புஜாராவுக்கு, ஸ்டம்பை நோக்கி உள்ளே வரும் பந்து இடைஞ்சல் தருகிறது. அதேபோலதான் ரெய்னாவும் ஒரு வீக்னசில் சிக்கியுள்ளார்.
ரெய்னா நன்கு சிந்தித்து ஷாட் செலக்ஷன் செய்தால், இப்பிரச்சினையில் இருந்து மீண்டுவிடலாம். அவர் ஒன்டே, டி20 கிரிக்கெட் தொடர்களில் சிறப்பாக ஆடக்கூடிய பேட்ஸ்மேன்.
சென்னையில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில், ரெய்னாவின் ஆட்டம், சிறப்பாக இருந்தது. அதேபோன்ற ஆட்டத்தை அனைத்து ஆட்டத்திலும் வெளிப்படுத்தினால் ரெய்னாவுக்கு ஷாட் பிட்ச் பந்து பிரச்சினையாக இருக்காது". இவ்வாறு லட்சுமணன் தெரிவித்துள்ளார்.