டெல்லி: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளராக இருந்த ராஜ்குந்த்ராவுக்கு, கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட ஆயுட்கால தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது முன்னாள் நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான குழு.
சுப்ரீம்கோர்ட் உத்தரவின்பேரில், ஐபிஎல் சூதாட்டம் குறித்து விசாரித்த முன்னாள் நீதிபதி லோதா தலைமையிலான குழு இன்று தங்களது தீர்ப்பை வெளியிட்டது.

அப்போது பேட்டியளித்த லோதா, "ராஜ்குந்த்ரா சூதாட்டத்தில் ஈடுபட்டது நேரடியாக நிரூபிக்கப்படவில்லை என்றபோதிலும், அவர் முறையற்ற வகையில் நடந்துகொண்டது உறுதியாகியுள்ளது. வேறு நபர் மூலமாக பெட்டிங்கில் ராஜ்குந்த்ரா ஈடுபட்டுள்ளார். இது கிரிக்கெட்டுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும்.
மார்ச் மாதத்தில் ராஜஸ்தான் அணியில் தனக்கு இருந்த பங்குகளை ராஜ்குந்த்ரா கைவிட்டுவிட்டார். ஆனாலும், அது காலம் தாழ்ந்த முடிவு. எனவே பிசிசிஐ தொடர்பான கிரிக்கெட் நடவடிக்கைகளில் ஈடுபட ராஜ்குந்த்ராவுக்கு ஆயுட்கால தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு லோதா தெரிவித்தார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் 2 ஆண்டுகாலம் ஐபிஎல் ஆட்டங்களில் விளையாட தடை விதித்துள்ளது இக்கமிட்டி. 2 ஆண்டு தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த அணியின் உரிமையாளர் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர்தான் ராஜ்குந்த்ரா என்பது குறிப்பிடத்தக்கது.