ஜெய்ப்பூர்: சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் அரை இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோணி பீல்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ராஜஸ்தான் அணி கேப்டன் டிராவிட் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் ரஹானே நிதானமாக விளையாடினார்.

அந்த அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. 19 ஓவர்கள் வரை நிலைத்து நின்று ஆடிய ரஹானே 70 ரன்கள் எடுத்தார்.
பின்னர் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறிகொடுத்தனர். சென்னை அணியின் அஸ்வின் மட்டும் 46 ரன்கள் எடுத்தார். 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 145 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.
ராஜஸ்தான் தரப்பில் 4 ஓவர்கள் வீசி 10 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய பிரவின் தம்பே ஆட்டநாகயனாக தேர்வு செய்யப்பட்டார். ஜெய்ப்பூரில் நடைபெற்ற போட்டிகளில் கடந்த ஐபிஎல் உட்பட 13 ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது ராஜஸ்தான் அணி.
இந்த வெற்றியைத் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இறுதிப் போட்டியில் நுழைந்துள்ளது.