மும்பை: ஐபிஎல் அணியான ராஜஸ்தான் ராயல்ஸை கால் சோமானி தலைமையிலான அமெரிக்க நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 1.63 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ₹15,300 கோடி) என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஐபிஎல் வரலாற்றில் மிகப்பிரம்மாண்டமான ஒப்பந்தமாக கருதப்படுகிறது. 2026 ஐபிஎல் சீசனுக்கு பிறகு இந்த விற்பனை அமலுக்கு வரும்.
அமெரிக்க தொழிலதிபர் கால் சோமானி இந்த தொகையை ரொக்கமாக செலுத்துவார். இவருக்கு வால்மார்ட் குடும்பத்தைச் சேர்ந்த ராப் வால்டன் மற்றும் ஹம்ப் குடும்பத்தினர் ஆதரவு அளித்துள்ளனர்.ஐபிஎல் வரலாற்றில் இதுவே மிகப்பெரிய ஒப்பந்தமாகும். உதாரணமாக, கடந்த ஆண்டு டோரண்ட் குரூப் குஜராத் டைட்டன்ஸ் அணியின் 67% பங்குகளை ₹5,025 கோடிக்கு வாங்கியது.

இதன் மூலம் அணியின் மதிப்பு ₹7,500 கோடியாக மதிப்பிடப்பட்டது. சிவிசி கேபிடல், 2021-ல் ₹5,625 கோடிக்கு அணியை வாங்கிய பிறகு, எஞ்சிய 33% பங்கை தக்கவைத்துக் கொண்டது.ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பெரும்பான்மையான (65%) பங்குகள் மனோஜ் பாதலேவின் எமர்ஜிங் மீடியா வென்ச்சர்ஸ் வசம் இருந்தது. ரெட் பேர்ட் கேபிடல் பார்ட்னர்ஸ், லச்லான் மர்டாக் உள்ளிட்டோர் மற்ற பங்குதாரர்கள்.

சோமானியின் கூட்டமைப்பு முதன்மை போட்டியாளராக இருந்தார். கடந்த ஆண்டு தொடங்கிய பங்கு விற்பனைக்கு தி ரெய்ன் குரூப் ஆலோசகர். ஆதித்ய பிர்லா குழுமம், அமெரிக்க விளையாட்டு முதலீட்டாளர் டேவிட் ப்ளிட்சர் மற்றும் ஆர்க்கெலர்மிட்டல் குடும்பத்தினர் உட்பட பல குழுக்கள் இந்த அணியை வாங்க ஆர்வம் காட்டின.
கால் சோமானி, அரிசோனாவின் ஸ்காட்ஸ்டேலைச் சேர்ந்த தொடர் தொழில்முனைவோர். கல்வி தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு நிர்வாகம், விளையாட்டு தொழில்நுட்பம் போன்ற துறைகளில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். இன்ட்ராஎட்ஜ் (IntraEdge) மற்றும் ட்ரூயோ (Truyo) போன்ற பல நிறுவனங்களின் நிறுவனர் இவர். மேலும், மோட்டார் சிட்டி கோல்ஃப் கிளப்பின் இணை உரிமையாளர், TMRW ஸ்போர்ட்ஸ், TGL கோல்ஃப் லீக் ஆகியவற்றில் ஆரம்பகால முதலீட்டாளர் என விளையாட்டுத் துறையிலும் ஈடுபாடு கொண்டவர்.

கால் சோமானி, 2021-லேயே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் முதலீடு செய்தவர். எனவே, இந்த அணி அமைப்புக்கு புதியவர் அல்ல. அப்போதே, ஐபிஎல்-லின் வளர்ச்சி திறன் மீது வலுவான நம்பிக்கை தெரிவித்திருந்தார். அவரது இந்த நம்பிக்கைதான், தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கட்டுப்பாட்டுப் பங்குகளை முழுமையாகக் கைப்பற்ற தீவிரம் காட்டினார். இதனைத் தொடர்ந்து ஆர்சிபி அணியும் கைமாற வாய்ப்புள்ளது.