ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அரசியல் உச்சகட்டத்தில் எட்டியுள்ள நிலையில் அந்த அணியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் ஒருவருக்கு பின் ஒருவராக வெளியேறி வருவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ராயல்ஸ் அணியில் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சனை நீக்கிவிட்டு ரியான் பராக்கை அந்தப் பதவிக்கு கொண்டு வர முயற்சி நடக்கிறது.
இதற்கு காரணம், அவருடைய உறவினரும் ராஜஸ்தான் அணியில் உள்ள முக்கிய நிர்வாகியுமான ரஞ்சித் பர்தாக்கூர் தான் இதன் பின்னணியில் உள்ளார். இதனால் சாம்சன் அணியை விட்டு செல்ல முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதேபோன்று ஒரு தரப்பினர் சஞ்சு சாம்சனையும், மறுதரப்பினர் ஜெய்ஸ்வாலையும் கேப்டன் ஆக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.இதனால் தற்போது ராஜஸ்தான் அணியில் மூன்று பிரிவுகள் ஏற்பட்டிருக்கிறது. ராஜஸ்தான் அணியில் உச்சகட்ட அரசியல் நிலவுவதால் அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் ராஜஸ்தான் அணியின் தலைமை செயல் அதிகாரியாக கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஜேக் லஸ் மெக்குரம் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
லண்டனை சேர்ந்த ஜேக் மெக்குரம் தனது 28 வது வயதில் 2021 ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணியின் தலைமை செயல் அதிகாரியாக பதவி ஏற்றார்.
ஐபிஎல் அணி நிர்வாகத்தில் உள்ள ஒரே வெளிநாட்டை சேர்ந்தவர் என்றால் அது ஜேக் மெக்குரம் தான். இதனால் ரசிகர்களில் கவனத்தை அவர் தொடர்ந்து ஈர்த்து வந்தார்.
மேலும் ராஜஸ்தான் அணியில் பல அதிரடி வீரர்களை உள்ளே கொண்டு வந்ததில் மெக்குரம்க்கு மிக முக்கிய பங்கு இருக்கின்றது.இந்த தருணத்தில் ராஜஸ்தான் அணியில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது அந்த அணியை விட்டு விலகுவதாக அறிவித்திருக்கின்றார்.
கடந்த ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் அணி 14 போட்டிகளில் விளையாடி வெறும் நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.இதனால், புள்ளி பட்டியலில் ஒன்பதாம் இடத்தை பிடித்தது .மேலும் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன் 5 போட்டிகளில் காயம் காரணமாக விளையாடவில்லை. இதனால், ராஜஸ்தான் அணியின் சிஇஓவே விலகி இருப்பதால் அந்த அணியில் எதுவும் சரியில்லை என்பதையே அது காட்டுவதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.