மும்பை: ராஜஸ்தான் அணி வீரர்கள் 3 பிரிவுகளாக பிரிந்து மோதலில் ஈடுபட்டு வருவது தெரிய வந்துள்ளது. ராஜஸ்தான் வீரர்களின் ஒரு தரப்பு ரியான் பராக்கையும், மற்றொரு பிரிவு யஷஸ்வி ஜெய்ஸ்வாலையும், 3வது தரப்பு நிர்வாகத்தையும் பின்பற்றி வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே ராகுல் டிராவிட் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகிவிட்டதாகவும் தெரிகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குள் நிலவி வரும் பிரச்சனைகள் காரணமாக அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பொறுப்பில் இருந்து விலகி இருக்கிறார். ஐபிஎல் மினி ஏலத்திற்கு இன்னும் 3 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விலகி இருப்பது பேசு பொருளாகி இருக்கிறது.

இதற்கு ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ரஞ்சித் பர்தாகூர் முக்கியக் காரணம் என்று விமர்சிக்கப்படுகிறது. இளம் வீரர் ரியான் பராக்கை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற காரணத்திற்காக சஞ்சு சாம்சனை புறக்கணிப்பதாக கூறப்பட்டது. இதனால் ராஜஸ்தான் அணியில் இருந்து சஞ்சு சாம்சன் விலகும் முடிவை எடுத்திருப்பதாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ராகுல் டிராவிட் விலகலுக்கான காரணம் குறித்து தெரிய வந்துள்ளது. அதாவது ராஜஸ்தான் அணிக்குள் 3 பிரிவுகளாக வீரர்கள் பிரிந்து கிடக்கின்றனர். ஒரு தரப்பு ரியான் பராக் பக்கமும், மற்றொரு தரப்பு யஷஸ்வி ஜெய்ஸ்வால் பக்கமும், 3வது தரப்பு சஞ்சு சாம்சன் பக்கமும் இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஏற்கனவே ஜெய்ஸ்வால் கேப்டன்சியில் ஆர்வம் காட்டி வருகிறார்.
ராஜஸ்தான் அணி வீரர்களுக்கு இடையில் இப்படியான மோதல் இருப்பதும், உரிமையாளர்களும் ஒவ்வொரு வீரர்களின் பக்கம் நிற்பதுமே ராகுல் டிராவிட்டுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் வேறு வழியின்றி ராகுல் டிராவிட் ஒராண்டிலேயே ராஜஸ்தான் அணியில் இருந்து வெளியேறிவிட்டதாக தெரிகிறது.
ராகுல் டிராவிட்டுக்கு ராயஸ் குழுமத்தின் மிக உயரிய பதவி அளிக்க முன் வந்தும் அவர் ஏற்காததற்கு இதுவே காரணம் என்றும் கூறப்படுகிறது. மேலும் ராஜஸ்தான் அணியின் முக்கிய உரிமையாளரான மனோஜ் உடனடியாக அனைத்து நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்த லண்டனுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் ராகுல் டிராவிட் இடத்திற்கு குமார சங்கக்காரா கொண்டு வரப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் அணிக்குள் நிலவி வரும் பிரச்சனைகளை சரி செய்து ஐபிஎல் மினி ஏலத்திற்கு தயாராகவும் மனோஜ் திட்டமிட்டு வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதனால் ராஜஸ்தான் அணிக்குள் மிகப்பெரிய மாற்றங்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.