மும்பை: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விலகி இருக்கும் நிலையில், அந்த அணியின் சாம்ராஜ்ஜியம் சரிந்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ரஞ்சித் பர்தாகூர் இருப்பதாகவும் பேச்சுகள் வரத் தொடங்கி இருக்கின்றன.
கடந்த சில ஆண்டுகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் எழுச்சி அபரிவிதமாக இருந்து வருகிறது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறினாலும், புள்ளிப் பட்டியலில் சரிவை சந்தித்தாலும், ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. அதேபோல் சஞ்சு சாம்சன், ரியான் பராக், ஜெய்ஸ்வால், துருவ் ஜுரெல், வைபவ் சூர்யவன்ஷி என்று இளம் வீரர்கள் நட்சத்திரங்களாக உருவாகி வருகின்றனர்.

ஆனால் கடந்த சீசன் முதலே ராஜஸ்தான் அணியின் நிர்வாகிகள் பல்வேறு மோசமான முடிவுகளை எடுத்து வருகின்றனர். பட்லர், சாஹல் ஆகிய இருவரையும் சஞ்சு சாம்சன் மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் ரீடெய்ன் செய்ய வேண்டும் என்று கூறியதை, ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்கள் ஏற்கவில்லை. அதற்கு பதிலாக ரியான் பராக், ஹெட்மயர் ஆகியோரை ரீடெய்ன் செய்தது.
இதன்பின் ஐபிஎல் தொடரின் போதும் சஞ்சு சாம்சனின் முடிவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. ராகுல் டிராவிட்டையும் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவில்லை. இதனால் ராகுல் டிராவிட் ஓராண்டிலேயே ராஜஸ்தான் அணியில் இருந்து விலகி இருக்கிறார். ஐபிஎல் ரீடென்ஷன் பட்டியல் வெளியாகும் போது சஞ்சு சாம்சனும் ரிலீஸ் செய்யப்படுவார் என்று கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.
இதற்கு ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ரஞ்சித் பர்தாகூர் இருந்து வருகிறார். ராயஸ் ஸ்போர்ட் பிரைவேட் லிமிடட் நிறுவனத்தின் எக்ஸிக்யூட்டிவ் சேர்மேனாக இருப்பவர் ரஞ்சித் பர்தாகூர். கவுகாத்தியை சேர்ந்த தொழில் அதிபரான ரஞ்சித் பர்தாகூர், நேரு குடும்பத்தைச் சேர்ந்த சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
இவர் ரியான் பராக்கிற்கு மாமா முறை உறவினர். ரியான் பராக்கை ராஜஸ்தான் அணியை கேப்டனாக முன்னிலைப்படுத்த ராகுல் டிராவிட்டுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதன் காரணமாகவே ரியான் பராக்கை 17 வயதிலேயே ராஜஸ்தான் அணிக்குள் கொண்டு வந்தனர். ஆனால் ரியான் பராக்கிற்கு கிடைக்கும் முக்கியத்துவம் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு அளிப்பதில்லை.
இதன் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சாம்ராஜ்ஜியம் சரிந்து வருவதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். அதற்கான முதல் படியாக ராகுல் டிராவிட் விலகல் அமைந்துள்ளதாக கூறி வருகின்றனர். இதனால் ரஞ்சித் பர்தாகூரை அணியின் பிற உரிமையாளர்கள் கட்டுப்படுத்த வேண்டிய தேவையும் எழுந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.