ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பல சிக்கல்களை சந்தித்தது. இந்திய அணிக்கு டி20 உலக கோப்பையை வென்று தந்த ராகுல் டிராவிட் அந்தப் பதவியில் இருந்து ஓய்வு பெற்று விட்டு ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டார்.
ராஜஸ்தான் அணிக்கு மீண்டும் டிராவிட் திரும்பியதால் அந்த அணி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த தருணத்தில் ராஜஸ்தான் அணி நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் 14 போட்டிகளில் வெறும் நான்கு போட்டிகள் மட்டுமே வெற்றி பெற்று பத்து போட்டிகளில் தோல்வியைத் தழுவி எட்டு புள்ளிகள் உடன் ஒன்பதாவது இடத்தில் இருந்தது.

இந்த தொடரில் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன் காயம் அடைந்து விட்டதாக கூறி அடிக்கடி நீக்கப்பட்டார். அது மட்டுமல்லாமல் 23 வயதான ரியான் பராக் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். இது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது.
அதில் ரியான் பராக்கின் உறவின தான் ராஜஸ்தான் அணியின் முக்கிய நிர்வாகி என்றும் இதனால் தான் அவரை கேப்டனாக மாற்ற முயற்சிகள் நடப்பதாக செய்திகள் வெளியானது. இதனால் தான் சஞ்சு சாம்சன் அணியை விட்டு நீக்கப்பட்டு இருந்ததாகவும், இந்த விவகாரத்தால் அணியில் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் ராஜஸ்தான் அணியில் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராகுல் டிராவிட் அதிரடியாக விலகி இருக்கின்றார். ஏற்கனவே சஞ்சு சாம்சன் அந்த அணி மீது கடும் அதிருப்தியில் உள்ள நிலையில், அவர் சிஎஸ்கேவுக்கு வரப்போகிறார் என்ற செய்திகளும் உலா வந்தது. இந்த தருணத்தில் டிராவிட் விலகி இருப்பது சர்ச்சையை அதிகப்படுத்தி இருக்கிறது.
இதற்கு காரணம் 23 வயதான ரியான் பராக் தான் என்று சிலர் குற்றம் சாட்டியுள்ளனர். ரியான் பராக் பாலிடிக்ஸ் செய்து வருவதாகவும் டிராவிட்டின் விலகலுக்கு பின்னணியில் அவர்தான் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் ரியான் பராக் மீது கடும் கோபத்தில் உள்ளனர். இதுவரை ரியான் பராக் மொத்தமாகவே பத்து போட்டிகள் தான் இந்திய அணிக்காக விளையாடி உள்ள நிலையில் இந்த சிறுவயதிலேயே அவர் அணியில் பாலிடிக்ஸ் செய்து வருவதாக ரசிகர்கள் சாடியுள்ளனர்.