மும்பை: ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு லக்னோ அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஆண்டி பிளவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சங்க்காரா நீக்கப்பட்டுள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஐபிஎல் தொடரின் முதல் சாம்பியனாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பட்டம் வென்றது. அதன்பின் யார் கண்பட்டதோ தெரியவில்லை. அந்த அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு கூட தொடர்ந்து முன்னேற முடியவில்லை. அதுமட்டுமல்லாமல் ராஜஸ்தான் அணியின் மதிப்பும் ரசிகர்கள் மத்தியில் குறைந்துகொண்டே வந்தது. இதனால் மாற்ற முடிவு செய்த ராஜஸ்தான் அணி நிர்வாகம், பயிற்சியாளராக சங்கக்காராவையும், கேப்டனாக சஞ்சு சாம்சனையும் நியமனம் செய்தது.

இந்த முடிவிற்கு உடனடியாக பலன் கிடைக்கவில்லை என்றாலும், கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறந்த பலன் கிடைத்தது. 15 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக ராஜஸ்தான் அணி ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதுமட்டுமல்லாமல் சஞ்சு சாம்சன் ரசிகர்கள் பலரும் ராஜஸ்தான் அணிக்கு ஆதரவளிக்க தொடங்கினார்கள். இதன் மூலம் ராஜஸ்தான் அணி மீதான சந்தை மதிப்பும் பன்மடங்கு உயர்ந்தது. இது அண்மையில் முடிந்த ஐபிஎல் தொடரில் வெளிப்படையாகவே தெரிந்தது.
தற்போதைய சூழலில் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி முக்கியமான அணியாக மாறியுள்ளது. இதனை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்ல ராஜஸ்தான் அணி அடுத்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதில் முதல் நடவடிக்கையாக புதிய பயிற்சியாளருக்கான தேடுதலை தொடங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக லக்னோ அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஆண்டி பிளவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அவர் பிஎஸ்எல் மற்றும் சிபிஎல் தொடர்களில் வெற்றிகரமாக இருந்துள்ளதால், அவரை ஒப்பந்தம் செய்ய தீவிரமாக இருக்கிறது.
இதனிடையே ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த சங்கக்காரா நீக்கப்பட்டாரா என்ற ரசிகர்களிடையே கேள்வி எழுந்தது. இதற்கு ராஜஸ்தான் அணி தரப்பில், ராஜஸ்தான் அணியின் இயக்குநராக சங்கக்காரா பதவி உயர்வு பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே இலங்கையின் மற்றொரு முன்னாள் வீரர் ஜெயவர்தனே மும்பை இந்தியன்ஸ் அணியின் இயக்குநராக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.