ஜெய்ப்பூர்: ஐபிஎல் போட்டித் தொடரில் பிளே ஆப் வாய்ப்பை தக்க வைக்க அடுத்து ஆடும் 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் நாளை மோதுகிறது.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசனில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற ஒவ்வொரு அணியும் முட்டி மோதுகின்றன. தற்போதைய நிலையில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஹைதராபாத், 2வது இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவது உறுதியாகி உள்ளது. பஞ்சாப் அணியும் கிட்டத்தட்ட நெருங்கி விட்டது.
இந்த நிலையில், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற, அடுத்து விளையாடும் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் மற்ற 5 அணிகள் உள்ளன. 10 ஆட்டங்களில் 4ல் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் தற்போது 6வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சிஎஸ்கேவுடன் ஜெய்ப்பூரில் நாளை மோதுகிறது.
தொடர்ந்து மூன்று தோல்விகளுக்குப் பிறகு, பஞ்சாப் அணிக்கு எதிராக வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இன்னும் பிளேஆப் வாய்ப்பு உள்ளது. ராஜஸ்தான் இதுவரை பெற்றுள்ள 4 வெற்றிகளில், மூன்று சொந்த மைதானமான ஜெய்ப்பூரில் கிடைத்துள்ளது. சிஎஸ்கேவுக்கு எதிராக நாளை சொந்த மண்ணில் களமிறங்குவதால் வெற்றிக்காக ராஜஸ்தான் போராடும்.
பேட்டிங்கிலும் துவக்கத்தில் இருந்தே வலுவாக உள்ள சிஎஸ்கேவின் பந்துவீ்ச்சிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பிளே ஆப் சுற்று வாய்ப்புடன், புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்க சிஎஸ்கே முயற்சி மேற்கொண்டுள்ளது. அதனால், வெற்றிக்காக சிஎஸ்கேவும் முயற்சி மேற்கொள்ளும் என்பதால் பரபரப்பான ஆட்டத்தை நாளை எதிர்பார்க்கலாம்.