மும்பை: 2026 ஐபிஎல் தொடர் நெருங்கி வரும் நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 16000 கோடி ரூபாய் அளவிலான மிகப்பெரிய விலைக்கு வாங்க ஒரு நிறுவனம் முன்வந்த நிலையில், அதை அந்த அணி நிர்வாகம் அதிரடியாக நிராகரித்துள்ளது. இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த கொலம்பியா பசிபிக் கேபிட்டல் பார்ட்னர்ஸ் என்ற முதலீட்டு நிறுவனம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 1.7 பில்லியன் டாலர் அதாவது சுமார் 16000 கோடி ரூபாய் கொடுத்து முழுமையாக வாங்க முன்வந்தது. நிஷா சச்தேவா மற்றும் தேப்ஜீத் குப்தா ஆகியோர் தலைமையிலான இந்த நிறுவனம், வெறும் 2 வாரங்களுக்குள் இந்த விற்பனையை அதிகாரப்பூர்வமாக முடிக்கவும் திட்டமிட்டிருந்தது.

ஆனால், நீண்ட கால வணிக உத்தி, ஒப்பந்தத்தின் கட்டமைப்பு மற்றும் எதிர்காலத் திட்டங்களைக் கருத்தில் கொண்டு ராஜஸ்தான் அணி நிர்வாகம் இந்த மாபெரும் தொகையை நிராகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் மனோஜ் படாலேவின் எமர்ஜிங் மீடியா வென்ச்சர்ஸ் நிறுவனம் 65 சதவீதப் பங்குகளையும், ரெட் பேட் கேபிட்டல் நிறுவனம் சிறுபான்மைப் பங்குகளையும் வைத்துள்ளன. இதற்கிடையே, பிரபல உருக்கு நிறுவனமான ஆர்சிலர் மிட்டல் நிறுவனமும் ராஜஸ்தான் அணியை வாங்கப் போட்டியில் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராஜஸ்தான் அணியின் இந்த அதிரடி முடிவு, ஒட்டுமொத்த ஐபிஎல் அணிகளின் சந்தை மதிப்பையும் பல மடங்கு உயர்த்தியுள்ளது. குறிப்பாக, தங்களது பங்குகளை விற்கத் தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மதிப்பில் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜஸ்தான் அணியை விட பெங்களூரு அணிக்கு நாடு முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமும், அபாரமான வணிக மதிப்பும் இருப்பதால், அந்த அணியின் சந்தை மதிப்பு தற்போது இருப்பதை விடக் குறைந்தது 15 சதவீதம் வரை அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது. ஏற்கனவே, ஆர்சிபி அணியை 2 பில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்க சில நிறுவனங்கள் தயாராக இருந்த நிலையில் அதன் மதிப்பு இன்னும் உயரலாம் என கூறப்படுகிறது. ஐபிஎல் அணிகள் வெறும் கிரிக்கெட் அணிகளாக மட்டுமின்றி, உலகளாவிய மிகப்பெரிய விளையாட்டுச் சொத்துகளாக உருவெடுத்து வருவதையே இது அப்பட்டமாகக் காட்டுகிறது.
