மும்பை: ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ரியான் பராக்கை கொண்டு வருவதற்காக சஞ்சு சாம்சனை ஓரம்கட்டியது தெரிய வந்ததால், அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராகுல் டிராவிட் விலகி இருப்பது தெரிய வந்திருக்கிறது. சஞ்சு சாம்சனின் இடத்தில் குறைந்தபட்சம் ஜெய்ஸ்வால் அல்லது துருவ் ஜுரெலை கொண்டு வரலாம் என்று டிராவிட் ஆலோசனை வழங்கி இருக்கிறார். அதனை ராஜஸ்தான் நிர்வாகம் ஏற்க மறுத்திருக்கிறது.
ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ரியான் பராக்கை கொண்டு வருவதற்காக அந்த அணியின் உரிமையாளர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சீசனிலேயே சஞ்சு சாம்சனுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக ரியான் பராக் ராஜஸ்தான் அணியை வழிநடத்தி இருந்தார். அந்த வாய்ப்பு யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு சென்றிருக்க வேண்டிய ஒன்றாகும்.

ஆனால் வடகிழக்கு மாநிலங்களில் ரியான் பராக்கிற்கு இருந்த செல்வாக்கு மற்றும் பிரபலமானவர் என்பதால், ராஜஸ்தான் அணி நிர்வாகம் அவரை தேர்வு செய்தது. ஆனால் ரியான் பராக் வசம் கேப்டன்சி சென்ற பின், சஞ்சு சாம்சனின் ஆலோசனைகளை ராஜஸ்தான் அணி நிர்வாகம் ஏற்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ராஜஸ்தான் அணியில் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் கடந்த சீசனில் சஞ்சு சாம்சனின் காயம் மற்றும் மோசமான ஃபார்ம் காரணமாக ராஜஸ்தான் அணி சஞ்சு சாம்சனை பொறுப்பில் இருந்து நீக்க முடிவு எடுத்துள்ளது. இந்த விவகாரம் குறித்து சஞ்சு சாம்சனுக்கு தெரிய வந்ததால், அவர் ஒட்டுமொத்தமாக அணியில் இருந்து விலக முடிவு எடுத்துள்ளார். இதுகுறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் ஆலோசனை நடத்தி இருக்கிறது.
அப்போது ராகுல் டிராவிட் சஞ்சு சாம்சனை தொடர வேண்டும் அல்லது யஷஸ்வி ஜெய்ஸ்வாலை கேப்டனாக கொண்டு வர வேண்டும் என்று ஆலோசனை கூறி இருக்கிறார். ராஜஸ்தான் அணி நிர்வாகம் பரிந்துரை செய்த ரியான் பராக்கை ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனென்றால் ஜெய்ஸ்வால் நீண்ட காலமாக இந்திய அணிக்காக ஆடி வருகிறார்.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக சுமார் 4 சீசன்களுக்கும் மேலாக ஆடி வருகிறார். கன்சிஸ்டன்சியுடன் ரன்களை விளாசி வருவதால், ராகுல் டிராவிட்டின் ஆதரவு ஜெய்ஸ்வாலுக்கு இருந்துள்ளது. டிராவிட் ஆதரவு அளிக்காததால், அவரை முக்கிய முடிவுகளை எடுக்கும் குழுவில் இருந்து நீக்க ராஜஸ்தான் நிர்வாகிகள் ஆலோசித்து, அவருக்கு பதவி உயர்வு அளிக்க முடிவு செய்துள்ளனர்.
இதனை அறிந்து கொண்ட ராகுல் டிராவிட், உடனடியாக பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கூறி இருக்கிறார். இதனால் ராஜஸ்தான் அணி நிர்வாகமும் உடனடியாக ஒப்புதல் கொடுத்துள்ளது. இதனால் இனி ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ரியான் பராக் நியமனம் செய்வதற்கு எந்தவித தடையும் இல்லை என்று பார்க்கப்படுகிறது.