தொடக்கமே விக்கெட்
துவக்க வீரர்களாக லிவிங்ஸ்டனும், கேப்டன் ரகானேவும் களம் இறங்கினர். வெறும் 2 ரன்களில் இஷாந்த் பந்தில், தவானிடம் கேட்ச் கொடுத்து ரகானே வெளியேறினார். அவர் தொடங்கி வைத்த விக்கெட் வீழ்ச்சி அடுத்தடுத்து தொடர்ந்தது. லிவிங்ஸ்டன் 14 ரன்களில் அவுட்டானார். ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்ட சஞ்சு சாம்சன் ரன் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.
6 ஓவர்களுக்குள் விக்கெட்டுகள்
லோம்ரர் 8 ரன்களில் வீழ்ந்தார். 6 ஓவர்கள் முடிவதற்குள் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின்னர் ஸ்ரேயாஸ் கோபால், பராக் ஆகிய இருவரும் கைகோர்த்தனர். இந்த ஜோடியும் நீண்ட நேரம் களத்தில் நிற்கவில்லை. கோபால் 12 ரன்களுடன் பை சொல்லி நடையை கட்டினார்.
வந்த வேகத்தில் அவுட்
அடுத்து வந்த பின்னியும் சந்தித்த முதல் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். ராஜஸ்தான் அணியில் வீரர்கள் வருவதும், போவதுமாக இருந்தனர். இளம் வீரர் பராக் மட்டும் களத்தில் நின்றார். அவருக்கு ஆதரவாக யாரும் நிலைக்க வில்லை. 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்களே எடுத்தது.
பராக் 50 ரன்கள்
100 ரன்களை கூட எட்டுமா என்று ரசிகர்கள் நம்பாமல் ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு நம்பிக்கை தரும் விதமாக பராக் 50 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ராஜஸ்தான் அணியில் 3 பேரை தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்திருப்பது, குறிப்பிடத்தக்கது.