சென்னை: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றிபெற 176 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் அணி சார்பாக பட்லர் 52 ரன்கள் எடுத்தார். அதேபோல் சென்னை அணி சார்பாக ஜடேஜா, ஆகாஷ் சிங் மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
16வது ஐபிஎல் தொடரின் 17வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து சென்னை அணி விளையாடி வருகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். சென்னை அணி சார்பாக தீக்சனா, ஆகாஷ் சிங், மொயின் அலி ஆகியோர் மீண்டும் சேர்க்கப்பட்டனர். அதேபோல் ராஜஸ்தான் அணியில் ரியான் பராக், போல்ட் நீக்கப்பட்டு தேவ்தத் படிக்கல், குல்தீப் சென் சேர்க்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் அணி சார்பாக பட்லர் - ஜெய்ஸ்வால் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் அதிரடியாக தொடங்கிய ஜெய்ஸ்வால் 8 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து துஷார் தேஷ்பாண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து தேவ்தத் படிக்கல் களமிறக்கப்பட்டார். இதனால் அவரின் அதிரடி அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. இதன் காரணமாக பவர் பிளே ஓவர்கள் முடிவில் அந்த அணி 57 ரன்கள் சேர்த்தது.
பின்னர் ஜடேஜா மற்றும் மொயின் அலி அட்டாக்கில் கொண்டு வரப்பட்டனர். அதில் மொயின் அலி வீசிய ஓவரில் பட்லர் அடுத்தடுத்து இரு சிக்சர்களை பறக்கவிட்டதால், ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் 8 ஓவர்கள் முடிவில் 86 ரன்களாக உயர்ந்தது. இதன்பின்னர் ஜடேஜா வீசிய 9வது ஓவரில் தேவ்தத் படிக்கல் 38 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் சஞ்சு சாம்சன் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டானார். இதனால் ராஜஸ்தான் அணியை காப்பாற்ற அஸ்வின் களமிறக்கப்பட்டார்.
அவரும் தன் பங்கிற்கு அறிமுக வீரர் ஆகாஷ் சிங் பந்துவீச்சில் 2 சிக்சர்களை அடித்து மிரட்டினார். ஆனால் அதே ஓவரின் கடைசி பந்தில் அஸ்வின் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். எதிர்முனையில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்ததால், பட்லரின் அதிரடி கட்டுப்படுத்தப்பட்டது. இருப்பினும் 33 பந்துகளில் அரைசதம் கடந்தார். பின்னர் அதிரடிக்கு மாறிய அவர், மொயின் அலி பந்தில் 52 ரன்களில் எடுத்து போல்டானார். இதனால் ராஜஸ்தான் அணி 16.2 ஓவர்களில் 142 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.

பின்னர் ஃபினிஷிங் ரோலில் வந்த ஹெட்மயர் - ஜுரல் கூட்டணி நிதானமான ஆடியது. 18 ஓவர்கள் முடிவில் 157 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 19வது ஓவரில் ஜுரல் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இருந்தும் அந்த ஓவரில் 10 ரன்கள் சேர்க்கப்பட்டது. தொடர்ந்து துஷார் தேஷ்பாண்டே வீசிய கடைசி ஓவரில் ஹோல்டரும் ஆட்டமிழக்க, ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்தது. இறுதிவரை ஆடிய ஹெட்மயர் 18 பந்துகளில் 30 ரன்கள் குவித்தார். சென்னை அணி சார்பாக ஜடேஜா, ஆகாஷ் சிங் மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.