மும்பை: 2026 ஐபிஎல் மெகா ஏலம் ஒருபுறம் பரபரப்பைக் கிளப்ப ஆரம்பித்து இருக்கும் நிலையில், மறுபுறம் இரண்டாவதாக ஒரு ஐபிஎல் அணி விற்பனைக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியைத் தொடர்ந்து, தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் விற்பனைக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து விலகி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாறி இருந்தார். இந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அதன் உரிமையாளர்கள் விற்கப் போவதாக பேசப்படுகிறது.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவின் சகோதரரான ஹர்ஷ் கோயங்கா தான் இந்த தகவலை முதன்முதலாக உடைத்தார். தனது ட்விட்டர் பக்கத்தில் "ஒரு அணி அல்ல, இரண்டு ஐபிஎல் அணிகள் விற்பனைக்கு வந்துள்ளன. ஒன்று ஆர்சிபி (RCB), மற்றொன்று ராஜஸ்தான் ராயல்ஸ் (RR). உரிமையாளர்கள் தங்களிடம் உள்ள 'உயர்ந்த மதிப்பீட்டை' பணமாக்க விரும்புகிறார்கள் என்பது தெளிவாகிறது" என்று பதிவிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள மதிப்பீடு என்பது தான் இந்த விற்பனைக்கு முக்கிய காரணம்.
'மதிப்பீடு' (Valuation) என்பது ஒரு அணியின் மொத்த சந்தை மதிப்பு. இது வெறும் மைதானத்தில் ஆடும் ஆட்டத்தை மட்டும் வைத்து கணக்கிடப்படுவதில்லை. எவ்வளவு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பின்தொடர்கிறார்கள்?, விளம்பரம் மற்றும் ஸ்பான்சர் மூலம் எவ்வளவு பணம் வருகிறது?, தோனி, கோலி, சஞ்சு சாம்சன் போன்ற முகங்கள் - இந்த மூன்றும் உச்சத்தில் இருக்கும்போதுதான் 'மதிப்பீடு' அதிகமாக இருக்கும்.
இதற்கு சிறந்த உதாரணம் சிஎஸ்கே. அந்த அணியின் மதிப்பீட்டுக்கு தோனி முக்கிய காரணம். தோனி ஓய்வு பெற்றால், அந்த மதிப்பு ஆட்டம் காணும். அதே காரணம் தான் இங்கும். சஞ்சு சாம்சன் மற்றும் விராட் கோலி ஆகியோரின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கும்போதோ அல்லது அவர்கள் விலகும்போதோ அணியின் மதிப்பு குறையக்கூடும். அதனால், "காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்பது போல, "மதிப்புள்ள போதே விற்றுக்கொள்" என்ற முடிவுக்கு உரிமையாளர்கள் வந்துள்ளனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முகமாகத் திகழ்ந்தவர் கேப்டன் சஞ்சு சாம்சன். அணியின் பிராண்ட் மதிப்பை உயர்த்தியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. ஆனால், தற்போது சஞ்சு சாம்சன் அணியிலிருந்து வெளியேறி இருக்கிறார். இனி அந்த அணியின் மதிப்பு சரிவடைய வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக 2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்லவில்லை என்றால் மதிப்பீடு சரியலாம். அதிக ரசிகர்களை கொண்ட நட்சத்திர வீரர்கள் இல்லை என்றால் வெற்றிகள் அவசியம் தேவை. இந்த இக்கட்டான நிலையில், அணியை விற்பதே புத்திசாலித்தனம் என்று உரிமையாளர்கள் கருதுகின்றனர்.
ஒரு அணியின் கேப்டன் மற்றும் 'முகமாக' இருக்கும் வீரர் வெளியேறினால், அந்த அணியின் மீதான ரசிகர்களின் ஈர்ப்பு சற்றே குறையலாம். அது அணியின் சந்தை மதிப்பை பாதிக்கலாம். எனவே, சஞ்சு சாம்சன் மூலம் கிடைத்த புகழையும், வெற்றியையும் வைத்து, அணி உச்சத்தில் இருக்கும்போதே விற்றுவிட்டு, லாபத்தைப் பார்த்துவிட ராஜஸ்தான் உரிமையாளர்கள் திட்டமிடுவதாகத் தெரிகிறது.
மறுபுறம் ஆர்சிபி அணியின் கதை இன்னும் சுவாரஸ்யமானது. 2025-ல் கோப்பை வென்ற ஆர்சிபி, இப்போது அதன் புகழின் உச்சத்தில் இருக்கிறது. விராட் கோலி என்ற ஒற்றை மனிதருக்காகவே ஆர்சிபி-க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஆனால், விராட் கோலிக்கு வயது ஆகிக்கொண்டே செல்கிறது. இன்னும் சில வருடங்களில் அவர் ஓய்வு பெறலாம்.
விராட் கோலி இல்லாத ஆர்சிபி-யை நினைத்துக்கூட பார்க்க முடியாது. அவர் ஓய்வு பெற்றால், ஆர்சிபி அணியின் பிராண்ட் மதிப்பு மற்றும் சந்தை மதிப்பு ஆகியவை சரிய வாய்ப்புள்ளது. இதைப் புரிந்துகொண்ட டியஜியோ (Diageo) நிறுவனம், கோலி இருக்கும்போதே, அணிக்கு மவுசு இருக்கும்போதே சுமார் 2 பில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் 17 ஆயிரம் கோடி) அணியை விற்றுவிட முடிவு செய்துள்ளது.
புனே, அகமதாபாத், மும்பை மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பெரும் பணக்காரர்கள் இந்த அணிகளை வாங்க ஆர்வம் காட்டுவதாக ஹர்ஷ் கோயங்கா குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக சீரம் இன்ஸ்டிடியூட் சி.இ.ஓ. ஆதார் பூனாவல்லா ஆர்சிபி அணியை வாங்க ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விற்பனை குறித்து கூடுதல் தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.