ராய்ப்பூர்: சத்தீஸ்கரைச் சேர்ந்த ஒரு மளிகை கடைக்காரருக்கு, அவர் வாங்கிய புதிய சிம் கார்டு மூலம் விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ் போன்ற கிரிக்கெட் ஜாம்பவான்களிடம் இருந்து அழைப்புகள் வந்த வினோதமான சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் கேப்டன் ரஜத் படிதாரின் பழைய போன் நம்பரை தான் அந்த கடைக்காரர் வாங்கி இருக்கிறார். இந்த விவகாரம் ரஜத் படிதாரின் கவனத்துக்கு செல்ல, அவர் இது பற்றி பேச முயன்ற போது, "நான் தோனி பேசுகிறேன்" அவரையே கலாய்த்து இருக்கிறார்கள். பின்னர் ரஜத் காவல்துறையை நாட வேண்டிய சூழல் ஏற்பட்டது.

சத்தீஸ்கரின் கரியாபந்த் மாவட்டத்தைச் சேர்ந்த மளிகை கடைக்காரரான மனிஷ் மற்றும் அவரது நண்பர் கேம்ராஜ், உள்ளூர் கடை ஒன்றில் புதிய சிம் கார்டு ஒன்றை வாங்கியுள்ளனர். அந்த எண்ணை தங்களது போனில் போட்டு வாட்ஸ்அப்பை ஆக்டிவேட் செய்தபோது, அதில் கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாரின் புகைப்படம் வந்துள்ளது.
இதை முதலில் பெரிதாகக் கண்டுகொள்ளாத அவர்கள், பின்னர் வந்த அழைப்புகளைப் பார்த்து அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றுவிட்டனர். ஆம், அந்த எண்ணுக்கு விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ் போன்ற புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்கள் அழைத்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதாரைத் தொடர்பு கொள்ளவே முயற்சித்துள்ளனர். உண்மையில், மனிஷ் வாங்கியது, ரஜத் படிதாரின் பழைய தொலைபேசி எண். 90 நாட்களுக்கும் மேலாகப் பயன்படுத்தப்படாததால், அந்த எண்ணை செல்போன் நிறுவனம் செயலிழக்கச் செய்து, புதிதாக மனிஷுக்கு விற்பனை செய்துள்ளது.
இந்த விவகாரம் ரஜத் படிதாரின் கவனத்திற்குச் சென்றதும், அவரே நேரடியாக மனிஷ் மற்றும் கேம்ராஜை தொலைபேசியில் அழைத்துள்ளார். "சகோதரா, நான் ரஜத் படிதார் பேசுகிறேன். அந்த எண் என்னுடையது, தயவுசெய்து திருப்பிக் கொடுத்துவிடுங்கள்," என்று அவர் கேட்டுள்ளார். ஆனால், இதை நம்பாத அந்த நண்பர்கள், "நாங்க எம்.எஸ். தோனி பேசுறோம்," என்று கிண்டலாகப் பதிலளித்துள்ளனர்.
கிரிக்கெட் உலகில் முக்கியமான நபர்களைத் தொடர்புகொள்ள அந்த எண் தனக்குத் தேவைப்படுவதாக ரஜத் படிதார் விளக்கியும் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. பொறுமையிழந்த படிதார், "சரி, நான் போலீஸை அனுப்புகிறேன்" என்று கூறி அழைப்பைத் துண்டித்துள்ளார்.
அடுத்த 10 நிமிடங்களிலேயே உள்ளூர் காவல்துறை மனிஷின் வீட்டுக் கதவைத் தட்டியுள்ளது. அப்போது தான், தாங்கள் விளையாட்டாக நினைத்தது எவ்வளவு பெரிய விஷயம் என்பதை அந்த நண்பர்கள் உணர்ந்தனர். தாங்கள் பேசியது உண்மையாகவே விராட் கோலி மற்றும் ஏபி டிவில்லியர்ஸுடன் தான் என்பதை அறிந்து அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர். உடனடியாக அந்த சிம் கார்டை அவர்கள் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
நடந்த சம்பவத்திற்குப் பிறகு பேசிய கேம்ராஜ், "ஒரு தவறான எண்ணால் நான் விராட் கோலியுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. என் வாழ்க்கையின் லட்சியமே நிறைவேறிவிட்டது," என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இந்த வினோதமான சம்பவம் அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.