ஐபிஎல் கோப்பையை வென்ற 3 நாளில் RCB கேப்டனுக்கு நேர்ந்த சோகம்.. 92 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி
இந்தூர்: பெங்களூரு அணியை ஐபிஎல் 2026 தொடரில் சாம்பியனாக்கிய ரஜத் படிதார், அடுத்த 3 நாட்களில் மற்றொரு டி20 தொடரில் கேப்டனாக களமிறங்கி படுதோல்வியைச் சந்தித்துள்ளார். மத்திய பிரதேச பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் அவரது தலைமையிலான குவாலியர் சீட்டாஸ் அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
மத்திய பிரதேச பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது சீசனின் முதலாவது லீக் போட்டி நேற்று இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் குவாலியர் சீட்டாஸ் மற்றும் உஜ்ஜைன் பால்கன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் குவாலியர் சீட்டாஸ் அணியின் கேப்டனாக ரஜத் படிதார் களம் இறங்கினார். டாஸ் வென்ற படிதார் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அவரது முடிவு தவறானதாக மாறியது.

முதலில் பேட்டி செய்த உஜ்ஜைன் பால்கன்ஸ் அணி, டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் மாதவ் திவாரியின் அதிரடி அரைசதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்தது. கடினமான 222 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய குவாலியர் சீட்டாஸ் அணி பேட்டிங்கில் முற்றிலும் சொதப்பியது.
படிதார் ஏமாற்றம்
ஐபிஎல் 2026 தொடரில் 15 போட்டிகளில் 501 ரன்கள் குவித்து அசத்திய படிதார், இப்போட்டியில் 5-வது வீரராக களம் இறங்கி 8 பந்துகளில் 1 பவுண்டரி உட்பட 11 ரன்கள் மட்டுமே எடுத்து ரிஷி மிக்லானி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இவரைத் தவிர மற்றொரு பெங்களூரு வீரரான மங்கேஷ் யாதவ் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.
உஜ்ஜைன் பால்கன்ஸ் அணி சார்பில் ஆயுஷ் மங்கர் 31 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும் மாதவ் திவாரி, ரிஷி மிக்லானி, அதீர் பிரதாப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனால் குவாலியர் சீட்டாஸ் அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் விரைவில் நடைபெற உள்ள அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டி20 அணியில் படிதாருக்கு முதல்முறையாக வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குவாலியர் அணி தனது அடுத்த போட்டியில் ஜூன் 5 அன்று போபால் லெபார்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.


Click it and Unblock the Notifications
