தேர்தல் வேலைதான் இல்லையே..! சென்னையில் ஐபிஎல்லை நேரில் கண்டுகளித்த ரஜினிகாந்த்
சென்னை : பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சேப்பாக்கம் மைதானத்திற்கு நேரடியாக வந்து கண்டு களித்தார்.
நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் வேலைகள் பரபரத்து கிடக்கின்றன. பாஜக, காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகள் மட்டுமல்லாது.. அனைத்து கட்சிகளும் பம்பரமாக சுழன்று கொண்டிருக்கின்றன.
கொளுத்தும் வெயிலில் வீதி, வீதியாக கட்சி தலைவர்களும், தொண்டர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். யாருக்கு அரியணை என்று கருத்து கணிப்புகளும் நாளொரு மேனியாய் பொழுதொரு மேனியாய் வந்து கொண்டிருக்கின்றன.

போர் வரட்டும், பார்க்கலாம்
ஆனால்... அரசியலில் நிச்சயம் களம் காண்பேன் என்பதை உறுதிப்படுத்தி அறிவித்த ரஜினிகாந்த் அப்படியே தலைகீழாக மாறி போனார். கட்சி குறித்து வலுவான பேச்சுகள் எழுகையில் போர் வரட்டும் பார்க்கலாம் என்றார்.

வெறுத்து போன ரசிகர்கள்
ரசிகர்களில் ஒரு பிரிவினர் பொறுமை இழந்தனர். திமுக உள்ளிட்ட பல கட்சிகளில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டனர். ரஜினிகாந்தும் அடுத்து வரக்கூடிய தமது திரைப்படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார்.

போட்டியில்லை
தற்போது லோக்சபா தேர்தல் பரபரப்பு வந்துள்ள நிலையிலும் அதிலும் போட்டியிட போவதில்லை என்று ரஜினிகாந்த் அறிவித்தார். அதனால் தேர்தல் பிரச்சாரங்கள், சுற்றுப்பயணங்கள், கட்சி மற்றும் ரசிகர்களுடன் ஆலோசனை இல்லை.
தேர்தல் பரபரப்பு இல்லை
தேர்தல் அறிக்கைகள் இல்லை.. கூட்டணி என்ற பேச்சும் இல்லை. இந்த சூழ்நிலையில், தேர்தலுக்கு இணையான எதிர்பார்ப்போடு ஐபிஎல் தொடரும் ஆரம்பித்திருக்கிறது.
ஐபிஎல் பார்த்த ரஜினி
ஐபிஎல் 2019 தொடரின் முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைப்பெற்றது. போட்டியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் கண்டு ரசித்தார்.
ரசிகர்கள் செல்பி
அவரது வருகையை கண்ட ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பினர். தலைவா.. தலைவா என்று ஆரவாரம் எழுப்பி.. மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர். பலரும் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.


Click it and Unblock the Notifications