லாகூர்: பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவருமான ரமீஸ் ராஜா, வர்ணனையின்போது நேரலையில் பாபர் அசாம் குறித்து அவதூறாகப் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. தனது மைக் ஆன் செய்யப்பட்டிருப்பதை மறந்த அவர், பாபர் அசாமை "நாடகம் போடுவார்" என்று விமர்சித்தது, தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லாகூர் கடாபி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், 49-வது ஓவரின் முதல் பந்தை பாபர் அசாம் எதிர்கொண்டார். அப்போது அவர் 1 ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில், சுழற்பந்து வீச்சாளர் சேனூரன் முத்துசாமி வீசிய பந்தில் அவருக்கு கேட்ச் அப்பீல் செய்யப்பட்டு, கள நடுவர் அவுட் கொடுத்தார்.
உடனடியாக, பாபர் அசாம் டி.ஆர்.எஸ் (DRS) முறையீட்டிற்குச் சென்றார். அந்த நேரத்தில், வர்ணனையாளர் குழுவில் இருந்த ரமீஸ் ராஜா, தனது மைக் ஆஃப் செய்யப்பட்டிருப்பதாக நினைத்து, "இவன் அவுட்தான், இப்ப டிராமா பண்ணுவான்" என்று உருது மொழியில் கூறினார்.

அவரது இந்தக் கருத்து, வர்ணனையில் நேரடியாக ஒளிபரப்பாகவில்லை என்றாலும், ஒளிபரப்பு ஆடியோவில் தெளிவாகக் கேட்டது. ஆனால், டி.ஆர்.எஸ் ரீப்ளேவில், பந்து பாபரின் பேட்டில் படவில்லை என்பது தெளிவாகத் தெரியவர, கள நடுவரின் முடிவு மாற்றப்பட்டு, பாபர் நாட் அவுட் என்று அறிவிக்கப்பட்டார்.
இந்தச் சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாகத் தப்பித்தாலும், பாபர் அசாமால் களத்தில் நீண்ட நேரம் நீடிக்க முடியவில்லை. பாகிஸ்தான் அணி 163 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்து வலுவான நிலையில் இருந்தது. பின்னர் 199 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்தது. அந்த நெருக்கடியான கட்டத்தில் களமிறங்கிய பாபர் அசாம், மீண்டும் தனது மோசமான ஃபார்மைத் தொடர்ந்தார். மிகவும் தடுமாற்றத்துடன் ஆடிய அவர், 48 பந்துகளைச் சந்தித்து வெறும் 23 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு, தொடக்க வீரர்கள் இமாம்-உல்-ஹக் 93 ரன்கள் எடுத்தும், கேப்டன் ஷான் மசூத் 76 ரன்கள் எடுத்தும் முதல் விக்கெட்டுக்கு 161 ரன்கள் சேர்த்து அபாரமான தொடக்கத்தை அளித்தனர். பாபரின் சொற்ப ரன் ஆட்டமிழப்புக்குப் பிறகு, முகமது ரிஸ்வான் 62* ரன்கள் மற்றும் சல்மான் அகா 52* ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். முதல் நாள் முடிவில், பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்கள் எடுத்தது.
ஒரு முன்னாள் கேப்டனாகவும், கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும் இருந்த ரமீஸ் ராஜா, தனது நாட்டின் நட்சத்திர வீரர் குறித்து இப்படிப் பொறுப்பற்ற முறையில் பேசியது, பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது, பாபர் அசாம் மீது நிலவும் கடும் அழுத்தம் மற்றும் உள்விமர்சனங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவும் அமைந்துள்ளது.