'பாகிஸ்தான் அணி டெஸ்ட் விளையாடி என்ன பயன்?'.. இங்கிலாந்திற்கு எதிரான தோல்வியால் சாடிய ரமீஸ் ராஜா
லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 103 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்தத் தோல்விக்குப் பிறகு பாகிஸ்தான் அணியின் செயல்பாட்டையும், அவர்களின் அணுகுமுறையையும் அந்த அணியின் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.
லீட்ஸ் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் இங்கிலாந்து அணி 238 ரன்கள் முன்னிலை பெற்றது. பாகிஸ்தான் அணி இரண்டு இன்னிங்ஸ்களிலும் முறையே 171 மற்றும் 135 ரன்களுக்கு சுருண்டது. இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து பாகிஸ்தான் அணி 86 ஓவர்கள் கூட முழுமையாக விளையாடவில்லை. இதனால் 3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இந்தத் தோல்வி குறித்துப் பேசிய ரமீஸ் ராஜா, "பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் தற்போதைய அணியின் செயல்பாடுகளால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். கடைசி 20 டெஸ்ட் போட்டிகளில் 17 போட்டிகளில் தோல்வியடைந்த ஒரு அணிக்கு எப்படி ரசிகர்கள் ஆதரவு அளிப்பார்கள்? தேர்வாளர்கள் குறிப்பிட்ட மைதானங்களில் மட்டுமே வெல்லக்கூடிய ஒருதலைப்பட்சமான அணியைத் தேர்வு செய்கிறார்கள்" என்று குற்றம் சாட்டினார்.
மேலும் அவர், "பாகிஸ்தான் மண்ணில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களைத் தயாரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தப்படுகிறது. இதனால் வேகப்பந்து வீச்சு முற்றிலுமாக புறக்கணிக்கப்படுகிறது. பல வீரர்கள் டி20 போட்டிகளில் விளையாடவே விரும்புகின்றனர். ஏனெனில் அது எளிதான வெற்றியைத் தருகிறது. அவர்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வம் இல்லை" என்று கூறினார்.
பாகிஸ்தான் கிரிக்கெட்டின் அடையாளம் வேகப்பந்து வீச்சு தான் என்று குறிப்பிட்ட ரமீஸ் ராஜா, "வேகப்பந்து வீச்சை முடக்கினால் பின்னர் எதற்காக நாம் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும்? வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்குவதன் மூலமே பாகிஸ்தான் கிரிக்கெட் மீண்டும் எழுச்சி பெற முடியும்" என்று தெரிவித்தார்.
பாகிஸ்தான் அணியின் தற்போதைய நிலை மிகவும் வருத்தமளிப்பதாக உள்ளது. முந்தைய காலங்களில் இம்ரான் கான், வாசிம் அக்ரம் மற்றும் வக்கார் யூனிஸ் போன்ற சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களின் தலைமையில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்து மண்ணில் தொடர்ச்சியாக மூன்று டெஸ்ட் தொடர்களை வென்று சாதனை படைத்திருந்தது. ஆனால் இன்று அந்த நிலை தலைகீழாக மாறியுள்ளது. அதற்கு காரணமாக தற்போது உள்நாட்டு கிரிக்கெட்டிலும் தரமான வீரர்கள் உருவாகவில்லை என்று ரமீஸ் ராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications
