மும்பை : 2024 ரஞ்சி ட்ராபி தொடரில் தமிழ்நாடு அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வரும் சாய் கிஷோர் இடது கை சுழற் பந்துவீச்சாளராகவும் முத்திரை பதித்து இருக்கிறார். இந்த ஆண்டுக்கான ரஞ்சி ட்ராபி தொடரில் 53 விக்கெட்கள் வீழ்த்தி அதிக விக்கெட்கள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் வரிசையில் முதல் இடத்தில் இருக்கிறார்.
அரை இறுதியில் மும்பை அணிக்கு எதிராக 5 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். இந்த நிலையில், அடுத்த ரவீந்திர ஜடேஜா என சாய் கிஷோரை பலரும் பாராட்டி வருகின்றனர். அவருக்கு விரைவில் இந்திய அணியில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என பலரும் கூறத் துவங்கி இருக்கின்றனர்.

ரஞ்சி ட்ராபி அரை இறுதியில் மும்பை அணியில் ஆடி சதம் அடித்த ஷர்துல் தாக்குர், சாய் கிஷோரை புகழ்ந்து பேசி இருக்கிறார். அவர் கூறுகையில், "அவர் மிக சிறப்பாக பந்து வீசினார். நீண்ட காலத்துக்கு பிறகு ஜடேஜாவுக்கு பின் ஒரு தரமான இடது கை ஸ்பின்னரை பார்க்கிறேன்" என்று குறிப்பிட்டார்.
சில மாதங்களுக்கு முன் இந்திய டி20 அணியில் சாய் கிஷோருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு சென்ற இந்திய அணியில் இடம் பெற்று முதன் முதலாக இந்திய அணிக்காக சர்வதேச போட்டியில் ஆடி இருந்தார் சாய் கிஷோர். அதன் பின் அவருக்கு கிடைத்த வாய்ப்புகளில் அவரால் பெரிதாக சோபிக்க முடியவில்லை.
தற்போது ரஞ்சி டிராபி தொடர் மூலம் மீண்டும் உச்சகட்ட ஃபார்முக்கு திரும்பி இருக்கிறார் சாய் கிஷோர். 15 இன்னிங்க்ஸ்களில் 53 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். தமிழ்நாட்டில் இருந்து ரஞ்சி ட்ராபியில் 50க்கும் மேற்பட்ட விக்கெட்கள் வீழ்த்திய மூன்றாவது பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் செய்து இருக்கிறார் சாய் கிஷோர். முன்னதாக வெங்கடராகவன் (58 விக்கெட்கள், 1972-73) மற்றும் ஆஷிஷ் கபூர் (50 விக்கெட்கள் 1999 - 2000) ஆகியோர் ஒரே ரஞ்சி ட்ராபி தொடரில் 50 விக்கெட் என்ற மைல்கல் சாதனையை படைத்தது இருந்தனர்.