மும்பை: ரஞ்சி டிராபி டெஸ்ட் தொடரில் ஆல்ரவுண்டராக மாபெரும் சாதனை படைத்து இருக்கும் ஜலஜ் சக்சேனாவுக்கு இந்திய அணியில் நீண்ட காலமாக வாய்ப்பு அளிக்கப்படவில்லை. தற்போது அவருக்கு 37 வயது ஆகிறது. இனி அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்ற நிலை உருவாகிவிட்டது.
அவர் ரஞ்சி டிராபி போட்டி தொடரில் மட்டுமே 6000 ரன்கள் மற்றும் 400 விக்கெட்களை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை படைத்து இருக்கிறார். சுழற் பந்துவீச்சாளராக இருக்கும் ஜலஜ் சக்சேனா பேட்டிங்கிலும் கை கொடுத்து வந்தார். ஆனால், இந்திய அணியில் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா என இரண்டு சுழற் பந்துவீச்சு ஆல் ரவுண்டர்கள் இருந்ததால் ஜலஜ் சக்சேனாவுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆனால், ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடிய ஹர்ஷித் ரானா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோருக்கு சமீபத்தில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவர்கள் இருவருக்கும் ரஞ்சி ட்ராபியில் ஆடிய அனுபவம் மிகக் குறைவாகவே உள்ளது.
இது பற்றி முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தனது கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். ஜலஜ் சக்சேனா செய்த சாதனை பற்றி பத்திரிக்கையாளர் ஒருவர் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவுக்கு ஹர்பஜன் சிங் காட்டமாக பதில் அளித்து இருந்தார். அந்த பத்திரிக்கையாளரின் பதிவில், "400 விக்கெட் மற்றும் 6000 ரன்கள் குவித்து இருக்கிறார். இந்திய தேசிய தொடரான ரஞ்சி ட்ராபியில் இந்த சாதனையை செய்த முதல் வீரர் ஆவார். ஆனால், அவர் இந்திய அணிக்கு ஆடும் தகுதியை இதுவரை பெறவில்லை. இதை புரிந்து கொள்ள மிகவும் கடினமாக உள்ளது. அவர் இந்திய அணியில் இடம்பெற இன்னும் என்ன செய்ய வேண்டும்?" என கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்கு பதில் அளித்து இருக்கும் ஹர்பஜன் சிங், "உங்கள் கருத்தை ஒப்புக் கொள்கிறேன். அவரை குறைந்தபட்சம் இந்தியா ஏ அணியிலாவது தேர்வு செய்ய வேண்டும். ரஞ்சி டிராபி தொடரால் இனி எந்த பயனும் இல்லையா? ஐபிஎல் தொடரில் இருந்து வீரர்கள் நேரடியாக இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்." என்று கூறி இருக்கிறார்.