கொல்கத்தா: 2025 ரஞ்சி கோப்பை தொடரின் காலிறுதிப் போட்டியில் மும்பை அணி ஹரியானாவை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அஜிங்க்யா ரஹானே, சூர்யகுமார் யாதவ், ஷாம்ஸ் முலாணி மற்றும் தனுஷ் கோட்டியானின் அபார பேட்டிங் மற்றும் ஷர்துல் தாக்குரின் பந்துவீச்சால் மும்பை அணி வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் மும்பை அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து 315 ரன்கள் எடுத்தது. ஷாம்ஸ் முலானி 91 ரன்களும், தனுஷ் கோட்டியான் 97 ரன்களும் எடுத்திருந்தனர். முதல் ஆறு வரிசை பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், பின்வரிசை வீரர்கள் மும்பை அணியை காப்பாற்றினர்.

அடுத்து ஆடிய ஹரியானா அணி ஒரு கட்டத்தில் 263 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து, முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்று விடலாம் என்ற நம்பிக்கையுடன் இருந்தது. அப்போது ஷர்துல் தாக்கூர் அபாரமாக பந்து வீசி கடைசி 5 விக்கெட்டுகளையும் அடுத்த 38 ரன்கள் எடுப்பதற்குள் வீழ்த்தினார். அதனால் ஹரியானா அணி 301 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் கேப்டன் அங்கித் குமார் 136 ரன்கள் எடுத்திருந்தார்.
மும்பை அணி இரண்டாவது இன்னிங்ஸ் ஆடியது. அப்போது அந்த அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே 108 ரன்கள் சேர்த்தார். சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடினார். முதல் இன்னிங்ஸில் சொதப்பிய அவர் இரண்டாவது இன்னிங்ஸில் 86 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்தார்.
சிவம் துபேவும் சிக்ஸ் அடித்து அதிரடியாக ஆடினார். அவர் 65 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து மும்பை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 339 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. ஹரியானா அணிக்கு 354 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
நான்காம் நாள் அன்று இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய ஹரியானா அணி வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது. லக்ஷயா தலால் 64 ரன்கள் சேர்த்து ஆறுதல் அளித்தார். ஏழாம் வரிசையில் இறங்கிய சுமித் குமார் 62 ரன்கள் சேர்த்தார். ஜெயந்த் யாதவ் 27 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ஹரியானா அணி இரண்டாவது இன்னிங்ஸில் 201 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. ஷர்துல் தாக்கூர் இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ராய்ஸ்டன் தியாஸ் சிறப்பாக பந்து வீசி 10.3 ஓவர்களில் 39 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தனுஷ் கோட்டியான் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். ஷர்துல் தாக்குர் 3 விக்கெட்களை வீழ்த்தினார். இதையடுத்து மும்பை அணி 152 ரன்கள் வித்தியாசத்தில் மூன்றாவது காலிறுதி போட்டியில் வெற்றி பெற்றது. அரையிறுதி சுற்றுக்கும் மும்பை அணி முன்னேறியுள்ளது.