மும்பை : ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் சத்தீஸ்கர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சௌராஷ்ட்ரா அணி சார்பாக களமிறங்கிய புஜாரா முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் தன்னுடைய 18 வது இரட்டை சதத்தை விளாசி இருக்கிறார். இதன் மூலம் உலக அளவில் அதிக முறை இரட்டை சதம் அடித்த நான்காவது வீரர் என்ற பெருமையை புஜாரா படைத்திருக்கிறார்.
ராஜ்கோட்டில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சத்தீஸ்கர் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 578 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து களம் இறங்கிய சௌராஷ்டிரா அணி முதலில் இருந்தே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

குறிப்பாக அனுபவ வீரர் புஜாரா களத்தில் நங்கூரமிட்டு சிறப்பாக விளையாடி வந்தார். புஜாராவை ஆட்டமிழக்க முடியாமல் சத்தீஸ்கர் அணி வீரர்கள் தடுமாறினர். இதனை அடுத்து புஜாரா முதலில் 197 பந்துகளில் தன்னுடைய 25 ஆவது சதத்தை ரஞ்சி கிரிக்கெட்டில் பூர்த்தி செய்தார். முதல் தர கிரிக்கெட்டில் இது அவருக்கு 66 ஆவது சதமாகும்.
இதனை தொடர்ந்து புஜாரா தொடர்ந்து அதிரடி காட்டிய நிலையில் தன்னுடைய 18ஆவது இரட்டை சதத்தை பூர்த்தி செய்து இருக்கிறார்.இதன் மூலம் உலக அளவில் அதிக இரட்டை சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் புஜாரா நான்காவது இடத்தை பிடித்திருக்கிறார். டான் பிராட்மன் 37 இரட்டை சதத்துடன் முதலிடத்திலும் wally haymmond 36 இரட்டை சதத்துடன் இரண்டாவது இடத்திலும், patsy hendren 22 இரட்டை சதத்துடன் மூன்றாவது இடத்திலும் புஜாரா 18 இரட்டை சதத்துடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.
இதேபோன்று ரஞ்சி கிரிக்கெட்டில் அதிக இரட்டை சதம் அடித்த பாரஸ் டோக்ராவின் சாதனையை புஜாரா சமன் செய்து இருக்கிறார். இருவரும் தற்போது ரஞ்சி கிரிக்கெட்டில் ஒன்பது இரட்டை சதம் அடித்திருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தொடரில் அனுபவ வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அதற்கு ஏற்றார் போல் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 46 ரன்களில் ஆட்டம் இழந்தது. இதன் மூலம் அனுபவ வீரர்கள் தேவை என்ற கோரிக்கை மீண்டும் வலுப்பெற தொடங்குகிறது.இந்த சூழ்நிலையில் புஜாரா இரட்டை சதம் அடித்திருப்பதால் அவர் ஆஸ்திரேலியா தொடரில் இடம் பெற வாய்ப்பை ஏற்பட்டு இருக்கிறது.