சென்னை : 2024 ரஞ்சி கோப்பை அரை இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி படுதோல்வி அடையக் காரணமே கேப்டன் சாய் கிஷோர் தான் என அணியின் பயிற்சியாளர் சுலக்ஷன் குல்கர்னி கூறி இருந்தார். இந்த நிலையில், பயிற்சியாளர் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து சாய் கிஷோருக்கு ஆதரவாக கருத்து கூறி இருக்கிறார் தினேஷ் கார்த்திக்.
ரஞ்சி கோப்பை அரை இறுதியில் தமிழ்நாடு - மும்பை அணிகள் மோதின. சுமார் 7 ஆண்டுகள் கழித்து தமிழ்நாடு அணி ரஞ்சி கோப்பை அரை இறுதிக்கு முன்னேறி இருந்தது. தமிழ்நாடு அணியின் கேப்டன் சாய் கிஷோர் அரை இறுதியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். அதன் பின் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 146 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. அடுத்து ஆடிய மும்பை அணி 378 ரன்கள் குவித்தது. அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் தமிழ்நாடு அணி 162 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இந்த தோல்விக்கு பின் தனிப்பட்ட முறையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த தமிழ்நாடு அணி பயிற்சியாளர் சுலக்ஷன் குல்கர்னி, இந்த படு தோல்விக்கு காரணமே கேப்டன் சாய் கிஷோர் தன்னிச்சையாக டாஸ் முடிவு எடுத்தது தான் எனக் கூறி இருந்தார். தான் மும்பையை சேர்ந்தவன் என்ற முறையில் போட்டி நடந்த மும்பை மைதானத்தில் டாஸ் வென்றால் முதலில் பந்து வீச வேண்டும் எனக் கூறியதாகவும், மொத்த அணியும் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீசும் என்ற மனநிலையில் இருந்ததாகவும், ஆனால், சாய் கிஷோர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்ததாகவும், அதனால் தான் அணி தோல்வி அடைந்ததாகவும் கூறி இருந்தார் சுலக்ஷன் குல்கர்னி.
தமிழ்நாடு அணியின் தோல்விக்கு ஒட்டுமொத்த காரணமே சாய் கிஷோர் தான் என்கிற ரீதியில் அவரது பேட்டி இருந்தது. இந்த நிலையில் தினேஷ் கார்த்திக், சாய் கிஷோருக்கு ஆதரவாகவும், பயிற்சியாளருக்கு எதிராகவும் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
"இது மிகவும் தவறானது. ஏழு ஆண்டுகள் கழித்து அணியை அரை இறுதிக்கு கொண்டு வந்த கேப்டன் என்று எண்ணாமல், இது பல நல்ல விஷயங்களுக்கான ஆரம்பம் என்று யோசிக்காமல், கேப்டனை ஆதரிக்காமல் பயிற்சியாளர் இப்படி பேசி இருப்பது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. ஒரு பயிற்சியாளர் அணியின் கேப்டன் மற்றும் வீரர்களை மொத்தமாக குழியில் தள்ளி இருக்கிறார்" என தினேஷ் கார்த்திக் தனது பதிவில் கூறி இருக்கிறார்.