சென்னை : தமிழ்நாடு கிரிக்கெட்டில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறார் அணியின் பயிற்சியாளர் சுலக்ஷன் குல்கர்னி. இவர் மும்பையை சேர்ந்தவர். சமீபத்தில் நடந்து முடிந்த ரஞ்சி ட்ராபி அரை இறுதியில் தமிழ்நாடு அணி, மும்பை அணியிடம் படுதோல்வி அடைந்தது. அதற்கு காரணமே, தமிழ்நாடு அணியின் கேப்டன் சாய் கிஷோர் தான் என குல்கர்னி ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்தார்.
அந்த விவகாரம் இந்திய அளவிலான உள்ளூர் கிரிக்கெட்டில் பெரும் விவாதத்தை கிளப்பி இருக்கிறது. அவருக்கு எதிராக முன்னாள் தமிழ்நாடு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் தமிழக கிரிக்கெட் அமைப்பை சேர்ந்த அதிகாரி என பலரும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், இனி வெளிமாநிலத்தில் இருந்து பயிற்சியாளர்களை நியமிக்கக் கூடாது என காட்டமாக விமர்சனம் செய்து இருக்கிறார்.

ரஞ்சி ட்ராபி அரை இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி கேப்டன் சாய் கிஷோர் தனது அறிவுரையை ஏற்காமல் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்ததாகவும், அதனால் வீரர்கள் மனதளவில் கேப்டன் முடிவை ஏற்க முடியாமல் முதல் ஒரு மணி நேரத்தில் சரியான மனநிலையில் பேட்டிங் செய்யாமல் விக்கெட்கள் பறிபோனதாகவும், தான் கூறியது போல முதலில் பந்து வீசிய அணியான மும்பை முதல் இன்னிங்ஸில் எளிதாக விக்கெட் வீழ்த்தியதாக சுலக்ஷன் குல்கர்னி தனது பேட்டியில் கூறி இருந்தார்.
மேலும், சாய் கிஷோர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த முதல் நாள் 9 மணிக்கே தமிழ்நாடு அணி தோல்வி அடைந்து விட்டதாக அவர் பேசி இருந்தது முன்னாள் தமிழக வீரர்களை கோபமடையச் செய்துள்ளது. ஸ்ரீகாந்துக்கு முன்னதாக தினேஷ் கார்த்திக், ஏழு ஆண்டுகளுக்கு பின் தமிழ்நாடு அணியை அரை இறுதி வரை அழைத்துச் சென்ற சாய் கிஷோரை பற்றி நல்லவிதமாக பேசாமல் இப்படி பேசி இருப்பது பெரிய தவறு என கூறி இருந்தார்.
முன்னாள் தமிழக வீரர் ஹேமங் பதானி, அணியில் என்ன நடந்தாலும் அது வெளியில் வரக் கூடாது. கேப்டன் மீது பழியை போடக் கூடாது. நல்ல பயிற்சியாளர்கள் அதை செய்ய மாட்டார்கள் என்று கூறி இருக்கிறார். தமிழ்நாடு கிரிக்கெட் அமைப்பை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "குல்கர்னி செய்தது தவறு. சாய் கிஷோரின் சரியான முடிவுகளால் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று இருக்கிறோம். ஒரே ஒரு முடிவுக்காக அவர் மீது குற்றம் சுமத்த முடியாது. பயிற்சியாளர்கள் அப்படி வேலை செய்ய மாட்டார்கள். குல்கர்னி தவறு செய்து இருக்கிறார்" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.